"யாருடைய அழுத்தத்தால் தடுக்க தயக்கம்?" ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி!
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்படும் மரணம் தொடர்கதையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் மனித சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி தமிழ்நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது.
முதலில் வெறும் பொழுது போக்கிற்காக இலவசமாக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடத் தொடங்குகின்றனர்.

ஆன்லைன் ரம்மி
பணத்தை வைத்து விளையாடும் போது தொடக்கத்தில் வெல்வது போலத் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் பணத்தை இழப்பது மட்டுமே ஒரே முடிவாக இருக்கிறது. ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான நபர்கள், தங்கள் மொத்த சேமிப்பை இதில் இழக்கும் அபாயமும் உள்ளது. இது தமிழ்நாட்டில் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் தற்கொலை
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி தான் சென்னை மணலியைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானார். 29 வயதான பவானிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விளையாட்டில் இதுவரை அவர் 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாவனி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈபிஎஸ் அட்டாக்
இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அரசை சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஓர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.

யாருடைய அழுத்தம்
காவல்துறை டிஜிபியே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களைத் தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடை சட்டம்
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே தமிழக சட்டசபையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்ததால், மீண்டும் மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி என்ற விஷம் பரவ தொடங்கிவிட்டது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அதில் நல்ல தீர்ப்பு வரும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications