ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. தவெக செயற்குழுவில் தீர்மானம்.. அந்த வார்த்தையை கவனிச்சீங்களா
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இருமொழிக் கொள்கைக்கு எதிராக 3வது மொழியை திணிக்க முயலும் கனவு நிறைவேறாது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்ஃபு வாரிய சட்டங்களுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை குறிப்பிட்டு விஜய் கட்சியின் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவெகவின் செயற்குழு கூட்டத்தில் நிறவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: -
முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம்
உலக அளவில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கை 110 கோடியாகவும், நமது நாட்டில் இந்த எண்ணிக்கை 14.9 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இவர்கள் எண்ணிக்கை, வரும் பத்தாண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்களை அக்கறையுடன் பாதுகாத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா. இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால். ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி, ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச். சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications