அதிமுக ஒருங்கிணைப்பாளராக இளையராஜாவுக்கு வாழ்த்துகள்- ஓபிஎஸ் அறிக்கை! எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து!
சென்னை: நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள இசைஞ்சானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இளையராஜாவை வாழ்த்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்தார். இதனை வரவேற்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது என கூறியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின்
அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! என வாழ்த்தி இருந்தார். இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதிமுக ஓபிஎஸ்
அதிமுகவின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இன்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்; தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என குறிப்பிட்டு இளையராஜாவை வாழ்த்தியுள்ளார். அதில், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனமகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
அதிமுக ஈபிஎஸ்
உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.@ilaiyaraaja அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சசிகலா வாழ்த்து
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளராக தம்மை கூறிக் கொள்ளும் சசிகலா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இசை உலகில் எண்ணற்ற சாதனைகளை புரிந்த சகோதரர் இளையராஜா அவர்கள், தொடர்ந்து தங்களுடைய சமூக பணியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.