ஓபிஎஸ் மலைபோல் நம்பும் கேஸ்.. தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்! அரசியல் எதிர்காலமே இதுதான்?
சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை சுட்டிக்காட்டி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் தன்னை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து உள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார். நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வு முன்பு கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால், இதற்கு இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது. "4-5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார். எங்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி வருறார்." எனவும் இ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அதிமுக பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஒ.பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறி உள்ளார். கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்றே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது எனவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கும் உத்தரவு தனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவில் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் நீதிபதிகள் மனுவை பட்டியலிட உத்தரவிட்டனர். ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுவை நேற்று விசாரிக்க கேட்டுக்கொண்டார். விரைவாக விசாரிப்பதற்கு என்ன அவசரம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஓபிஎஸ் வழக்கறிஞர், இடைக்கால தடையால் செயல்பட முடியாத நிலை உள்ளதாக கூறினார். இதனையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications