அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்... ஓ.பி.எஸ். பிறந்தநாள் வாழ்த்து..!
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் நபராக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில்;
''தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்துச் செய்தியும் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
வந்தால் ராஜாவாக தான் வருவேன் என்பதை போல் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் அரசியலுக்கு வருகிறார் ரஜினி. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என அவர் கூறியதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போன்றோர் கடுமையாக ரஜினியை எதிர்த்திருந்தனர்.
அரசியல் கட்சியை இன்று பதிவு செய்கிறார் ரஜினிகாந்த்? டெல்லி விரைந்த நிர்வாகிகள்.. கட்சி பெயர் என்ன?
ஆனால் ஓ.பி.எஸ். மட்டும் தொடர்ந்து ரஜினி மீது சாஃப்ட் கார்னரில் இருந்து வருவது முதல் ஆளாக அவர் கூறிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியே ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதனிடையே ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு சூழல் வந்தால் அமைக்கும் எனக் கூறியிருந்தார் ஓ.பி.எஸ்.
இதன் மூலம் அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ரஜினி விவகாரத்தில் ஆளுக்கொரு நிலைப்பாடு எடுத்திருப்பதே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.