எடப்பாடி பற்றிய ரகசியங்களை மோடியிடம் போட்டு கொடுத்தேனா? ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? ஓபிஎஸ் விளக்கம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்ததாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோவையில் ஓபிஎஸ் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு என்ற பெயரில் கோவையில் சூலூரில் ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசிய போது முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் கையெழுத்து போட்டுத்தான் ஃபைல்கள் அனைத்தும் போகும். நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன் என்றார் ஓபிஎஸ். இந்த நிலையில் திருச்சிக்கு விமான நிலைய திறப்பு விழாவுக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
அவரை ஓபிஎஸ் சந்தித்து எடப்பாடி பழனிசாமி குறித்த ஊழல் பட்டியலை அவரிடம் அளிக்க போகிறார் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. இந்த நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: திருச்சி விமான நிலையத்தில் நான் பிரதமரை சந்தித்தேன். அப்போது அவரிடம் அரசியல் பேசவில்லை. அவரிடம் புத்தாண்டு வாழ்த்து கடிதத்தை மட்டுமே கொடுத்தேன். வாய்ப்பு கிடைத்தால் டெல்லிக்குச் சென்றே பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பேன்.
எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு நடந்து வரும் நிலையில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்.
அதிமுகவை மீட்க போராட்டம் தொடரும். சசிகலா விரும்பினால் நிச்சயம் அவரை சந்திப்பேன். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான சூழல் உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகளை கல் நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்துள்ளனர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications