எடப்பாடியின் ஆபரேஷனுக்கு செட்பேக்... சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம்... ஓபிஎஸ் கோஷ்டி ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செக் வைத்துள்ளனர். அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வரவேண்டும் என அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஓபிஎஸ் கோஷ்டியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுகவில் தர்மயுத்தம் நடத்திவிட்டு பின்னர் துணை முதல்வர் பதவியை ஏற்றது முதலே ஓபிஎஸ் நம்பர் 2-ஆகவாகத்தான் இருந்து வருகிறார். என்னதான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஓபிஎஸ்-க்கு நம்பர் 2 இடம்தான் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாகவே இருக்கிறார்.

நம்பர் 2 இடத்தில் ஓபிஎஸ்
சட்டசபை தேர்தலின் போது ஓபிஎஸ் எத்தனையோ பிரயத்தனப்பட்டு பார்த்தார். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் ஓபிஎஸ் என்னனோவெல்லாம் செய்தும் பார்த்தார். எதுவும் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியை வெல்ல முடியாத நிலைதான். இதனால் வேறுவழியே இல்லாமல் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என நம்பர் 2- இடத்தை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார்.

சசிகலா எதிர்ப்பு தீர்மானம்
அத்துடன் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்தால் தமக்கு அதிகாரம் கிடைக்கும் என கனவு கண்டார் ஓபிஎஸ். ஆனால் இந்த கனவிலும் எடப்பாடி அணி மண்ணை அள்ளிப் போட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டமாக சசிகலாவை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் ஓபிஎஸ் மிகவும் கொந்தளிப்பாகவே எடப்பாடியிடம் பேசினார் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அதிருப்தி
அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய என்னை கேட்காமல் எப்படி மாவட்டங்களில் தீர்மானம் போடுகிறீர்கள்? என கோபப்பட்டாராம் ஓபிஎஸ். இதனால் சசிகலாவுக்கு எதிராக மாவட்டங்களில் தீர்மானம் போடுவது சற்று தடைபட்டது. இன்னொரு பக்கம் சசிகலாவின் ஆடியோ அரசியல் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Recommended Video

சசிகலா ஆதரவு தீர்மானம்
அதிமுக தொண்டர்களிடம் பேசும் சசிகலாவும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் எடப்பாடிக்கு எதிராகவும் பேசுகிறார். இந்த ஆடியோக்கள் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. இது அதிமுகவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆடியோக்கள் தாக்கத்தால்தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ,சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஓபிஎஸ் அணி மகிழ்ச்சி
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தங்கள் தரப்புக்கு வலுசேர்க்கும் விதமாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் போல மேலும் பல மாவட்டங்களில் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாம். இதனால் இப்போதைக்கு ஓபிஎஸ் அணி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications