எடப்பாடிக்கு சிக்கல்.. கடைசி “அஸ்திரத்தை” கையில் எடுத்த பன்னீர்! தேர்தல் ஆணையத்திடம் மனு
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். மீதமுள்ள 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் படித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தீர்மானங்களை முன்மொழிந்தார். ஓ.பி.எஸுக்கு பதிலாக கட்சி வரவு செலவு கணக்கை சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாசித்தார்.

ஓபிஎஸ் மனு
இந்த பொதுக்குழு விபரங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீசெல்வம் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் மனுவில் கோரி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications