Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘திமுகவுடன் ஓபிஎஸ் கள்ள உறவு’ - பொன்னையன் கிழி.. கிழி.. கிழி.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா இருக்கும்வரை அதிமுகவில் பவர்புல்லாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு கட்சியில் டம்மியாக்கப்பட்டார். பிறகு பாஜக கூட்டணியில் அவரை முன்னிலைப்படுத்தி வந்த நிலையில், அங்கும் அவருக்கு கதவுகளை அடைத்தனர். இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. சில மாதங்கள் தர்மயுத்தம் நடத்தியவர், பிறகு மீண்டும் சமரசமாகி கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

ops-in-illegal-relationship-with-dmk-says-ponnaiyan

ஓபிஎஸ் அரசியல் மாற்றம்

ஆனாலும் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வந்தது. ஆட்சி மாறிய பிறகு அவரின் மொத்த பவரும் பிடுங்கப்பட்டு கட்சியில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஆதரவாளர்களுடன் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

நாளடைவில் அங்கேயும் அவருக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகினார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

திமுகவுடன் கள்ள உறவு

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன், "ஓ. பன்னீர்செல்வம் எப்போதோ அழிந்துவிட்டார். அவர் அதிமுகவிலும், ஆட்சியிலும் பொறுப்பில் இருந்தபோதே திமுகவுடன் கள்ள உறவில் இருந்தவர். தனது அப்பாவின் புகைப்படத்துடன், கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து சாமி கும்பிடுவேன் என்று அவர் சட்டசபையில் பேசியபோதே அவர் அம்பலமாகிவிட்டார். தற்போது அந்த கள்ள உறவு மீண்டும் நிரூபணமாகிவிட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது அவருக்கு அழிவு. அது எங்களுக்கு லாபம். யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதை போல, ஓபிஎஸ் தன் தலையில் அவரே மண்ணை வாரி போட்டுக் கொண்டுள்ளார். அவர்தான் கள்ள உறவுக்காரர் என்ற பட்டத்தை பெற்றுவிட்டார். இனியும் அவரைப்பற்றி பேச விருப்பமில்லை.

செல்லாக்காசு

எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதால் தான் தனக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது, என அவர் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. ஓபிஎஸ் எப்போதோ செல்லாக்காசாகவும், துரோகியாகவும் மாறி கடலில் மூழ்கிவிட்டார். எங்களை பொறுத்தவரை அவரின் கதை முடிந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கான மொத்த அதிகாரமும் 2 கோடி தொண்டர்கள் இணைந்து எடப்பாடியாருக்கு வழங்கிவிட்டோம். கூட்டணியை எப்படி வலிமையாக்குவது என்பதை அவர் நன்கறிவார்.

அதிமுக கொள்கை

தேசிய ஜனநாயக கூட்டணி ஆபத்தானது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகிறார். அவர் பல கட்சிகள் மாறி வந்தவர். பல கொள்கைளுக்கு ஆதரவளித்து ஏற்றவர். எங்களைப் பற்றி குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. அதிமுக எங்கள் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்போம்.

அந்த வகையில் நீண்ட காலமாக இருமொழி கொள்கையை முன்னிறுத்தி வருகிறோம். 50 வருடங்களாக அந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்காது. தமிழகத்தில் இன உணர்வு, திராவிட உணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+