அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் சுதந்திர தின வாழ்த்து அறிக்கை; டிடிவி தினகரனும் வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அனைத்திந்திய திராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாய்மண்ணை மீட்க தனது இன்னுயிரை ஈந்து அரும்பாடு பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுக்கிணங்க பாரதம் பாரினில் சிறக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பரம்பரை பரம்பரையாய் அடிமைத் தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தினநாள் நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சுதந்திரத்தைப் பெற தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை, தியாகிகளை, வீற மறவர்களை நினைத்துப் போற்றி வணங்குவதற்குரிய நன்னாள் சுதந்திரத் திருநாள்.

தமிழ்நாட்டு வீரர்கள்
இந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது. தமிழ்நாட்டில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்ததோடு, விடுதலை உணர்ச்சியை மக்களிடையே விதைத்தவர் பூலித்தேவன் அவர்கள். இவரைத் தொடர்ந்து, ஆளவந்த ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்திச் சுதந்திர விதையை விதைத்த பெருமை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு உண்டு. "வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னன் காணிக்கு வரி ஏன் செலுத்த வேண்டும்" என்று வினவி தூக்கு மேடை ஏறியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள். இந்த உணர்ச்சி வீண்போகாமல் காலந்தோறும் மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியது என்று சொன்னால் அது மிகையாகாது.

தேசபக்தி
இதேபோன்று, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என எண்ணற்ற தலைவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களிடையே இருந்த தேசபக்தி. இந்த தேச பக்திக்கு உதாரணமாக ஒன்றை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பகத்சிங்
தாய் மண்ணை மீட்கப் போராடிய மாவீரன் பகத்சிங்கிற்கு ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது. " மரணத்திற்கு முன்பு ஏதும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்" என்ற வாய்ப்பு மாவீரன் பகத்சிங்கிற்கு அளிக்கப்பட்டது. உடனே "ஒரு கிரிமினல் குற்றவாளியாக என்னைத் தூக்கில் போடாதே, என்னை எதிரியாக நினைத்து சுட்டுக் கொல்" என்றார் பகத்சிங். "எப்படியும் சாகப் போகிறாய். எப்படிச் செத்தால் என்ன" என்று ஆங்கிலேயர் அலட்சியமாகக் கேட்டபோது "தூக்கிலிட்டால் என் உயிர் பிரியும்போது என் தாய் மண்ணைத் தொட முடியாதபடி உயரத்தில் இருக்க நேரிடும். ஆனால் துப்பாக்கியால் சுட்டால் செத்து விழும்போதும் என் தாய் மண்ணை தழுவியபடி சாவேன்" என்றார் பகத்சிங். இது தாய் மண்ணின் மீது அவருக்கு உள்ள மாறாப் பற்றினை எடுத்துக் காட்டுகிறது.

தியாகிகள்
ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரருக்குப் பின்னும் இதுபோன்றதொரு தேசபக்தி இருந்தது. இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற தியாகச் சீலர்கள் கிளர்ந்து எழுந்து தம் வாழ்வைத் துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமைத் தளையைத் தகர்த்தெறிந்தனர். இந்தியத் திருநாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ள இந்த நிலையில், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடிய அத்தனை வீரர்களையும், வீராங்கனைகளையும், தியாகிகளையும் நாம் நினைத்துப் போற்றுவோம்.

வல்லரசு
"வளமான வல்லரசு, பலமான நல்லரசு" என்று இந்தியாவை உருவாக்க மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்னும் மகாகவி பாரதியாரின் பொன்மொழியைப் போற்றிப் பரப்பிடுவோம்; அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம் என்று தெரிவித்து, மீண்டும் ஒருமுறை எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை
இவரைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரத்தின் பவள விழா நாளில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நெடிய இந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சோப லட்சம் பேரின் உயிர்த்தியாகமே நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க காரணமாக அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கொடிக்க ரத்தம் சிந்திய அந்த மாவீரர்களை இந்த நன்னாளில் மனதார நினைத்து வணங்கிடுவோம்.

கடமை
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முழுமையான விடுதலை உணர்வோடு வாழ்வதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்பதை சுதந்திர தின பவள விழா நாளில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம், சிறந்த கல்வி. சிறப்பான பொருளாதாரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம். எனவே, அதனை நோக்கி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுகளுக்கு இருக்கிறது.
Recommended Video

வாழ்த்து
அதனை சாத்தியப்படுத்துவதற்கு மத, சாதி, இனப் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் விடுதலைப் போராட்டத்தின்போது ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, இந்திய திருநாட்டின் உயர்வுக்காகவும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம். இந்த தேசத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டம் முதன் முறையாக தொடங்கிய இடம் தமிழ் மண்தான். அதுவே ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அமைந்தது. அந்த உணர்வோடும், உரிமையோடும் தமிழனாக, இந்தியனாக பெருமிதம் கொள்வோம். எல்லாவற்றிலும் தேசப்பற்றோடு செயல்பட்டு நம்முடைய நாட்டினை வல்லரசாக உயர்த்துவதற்கு உழைத்திடுவோம்" என்று டிடிவி தினகரன் தனது சுதந்திர தின வாழ்த்து அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications