மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமிக்கிறார்..ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக வாதம்
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கோரி ஒருபக்கம் சட்ட போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் தனியாக கட்சி நிர்வாகிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நியமித்து வருகிறார். ஓபிஎஸ்சின் இந்த செயலை சுட்டிக்காட்டி அதிமுக தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு இன்று பிற்பகலில் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று அதிமுக, எடப்பாடி தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் வைத்த வாதத்தில், கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏவாக செயல்படுவதில் இருந்து மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விளக்கப்படவில்லை. தனியார் நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரம் உள்ளது" என்று கூறப்பட்டது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளுக்கு ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இது தொடர்பாக அவ்வப்போது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் ஓ பன்னீர் செல்வம் தனியாக கட்சி நிர்வாகிகளை நியமித்து வருவதையே சுட்டிக்காட்டி அதிமுக தரப்பு அவருக்கு எதிரான வாதமாக முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications