OPS: புதிய கட்சியை தொடங்கியாச்சு! என்டிஏவில் இணைகிறாரா ஓபிஎஸ்? அப்போ அந்த விஷயம் அவருக்கு ஓகேதானா?
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள ஓபிஎஸ், இன்று அமித்ஷாவை சந்தித்து என்டிஏ கூட்டணியில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்களை எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைக்க வேண்டும் என கூறி வரும் அவர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார்.
அதிமுகவில் எப்படியாவது இணைந்து கொள்ளலாம் என்ற முனைப்பில் இருந்த அவர், இதற்காக டெல்லி பாஜக தலைமையிடம் எல்லாம் சிபாரிசுக்காக சென்றார். அவர்கள் சமரசம் பேசுமாறு கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடும் அதிருப்தியில் இருந்த அவர் பிரதமரை சந்திக்க முயற்சித்தார்.
செல்போன் அழைப்பு
ஆனால் அவரது செல்போன் அழைப்புகளை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடுக்கவில்லை என்பதால் அந்த கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினார். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடந்த அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பிரிந்தவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.
எடப்பாடி பழனிசாமி
ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி திருந்தாவிட்டால், திருத்தப்படுவீர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கூட்டத்தை அவர் ஒத்தி வைப்பதாக கூறி டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளில் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
புதிய கட்சி
இந்த நிலையில் திடீர் திருப்பமாக புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கிவிட்டதாக அறிவித்தார். அதாவது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றியிருக்கிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
மீட்புக் குழு
இத்தனை நாளாக மீட்புக் குழு என்ற பெயரிலேயே அறிக்கைகளை வெளியிட்டிருந்த அவர், தற்போது மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அது போல் அந்த அறிக்கையில் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பது குறித்த விவரங்கள் ஏதும் இல்லை.
முன்னாள் முதல்வர்
எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது போல் இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதிவு செய்து விட்டாரா என தெரியவில்லை. இதற்கு முன்னர் தனது குழு சார்பில் வெளியிடும் அறிக்கைகளில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.
நந்தனம் முகவரி
ஆனால் தற்போது நந்தனத்திற்கு முகவரியை மாற்றிவிட்டார் போல! நேற்று வெளியான அறிக்கையில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தமிழகம் வருகிறார். அப்போது அவரை சந்தித்து என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் இணைவார் என சொல்லப்படுகிறது. அப்படியே இணைந்தாலும் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அவர் எப்படி ஏற்பார் என தெரியவில்லை.
முதல்வர் வேட்பாளர்
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்துதான் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே வந்தார். அதிமுக ஒன்றிணைய டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக செயல்படுவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு செல்வார் என சொல்லப்படுகிறது. தினகரனும் அமமுக என்ற கட்சியை தொடங்கிவிட்டார். எனவே ஒன்றிணைந்த அதிமுகவை சசிகலா மட்டுமே கொண்டு வருவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications