இதோ பாருங்க நயினாருக்கு 2 SMS அனுப்பியிருக்கேன்.. ஆதாரம் காட்டிய ஓபிஎஸ்!
சென்னை: பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கித் தருமாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தான் அனுப்பிய குறுஞ்செய்தியை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதாரமாக காட்டியுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போக போனிலும் 6 முறை அழைத்தும் தனது அழைப்பை நயினார் நாகேந்திரன் எடுக்கவில்லை என்றும் அவர் தரப்பு ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.
கடந்த ஜூலை 26ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி பெற்று தருமாறு நயினார் நாகேந்திரனின் செல்போன் எண்ணுக்கு, ஓபிஎஸ் இரு முறை மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமையும் ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமையும் இந்த மெசேஜ்கள் அனுப்பப்பட்டன. அதில் "HONOURABLE AIADMK COORDINATOR MR.O.PANNERSELVAM WANTS TO SPEAK WITH YOU" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மெசேஜ்களை புதிய தலைமுறை செய்தியாளரிடம் ஓபிஎஸ் காட்டினார்.

அதிமுக- பாஜக கூட்டணி
அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 26 ஆம் தேதி ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி, தமிழகம் வந்திருந்தார். அப்போது அவரை பார்க்க நேரம் ஒதுக்கித் தருமாறு ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த கடிதம் ஊடகங்களில் வெளியானது.
பிரதமரை சந்திக்க அனுமதி
இந்த நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர் மீட்பு உரிமைக் குழு விலகிவிட்டது. இதுகுறித்து நயினாரிடம் கேட்ட போது, "அவர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது குறித்து எனக்கு தெரியாது. நான் அவரை தொடர்பு கொண்டு பேசிய நிலையிலும் அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
தமிழகம் வந்த மோடி
அவர் என்னை தொடர்பு கொண்டு கேட்டால் வரும் 26ஆம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு பதிலடியில், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு நயினார் நாகேந்திரனுக்கு ஓபிஎஸ் 6 முறை போன் செய்தார். அவருடைய போன் காலை நயினார் எடுக்கவே இல்லை.
இரு எஸ்எம்எஸ்
பிறகு இரு குறுஞ்செய்திகள் அனுப்பியும் அதற்கு பதில் இல்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ''பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை. 6 முறை போனில் தொடர்பு கொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
நயினார் கூறியது என்ன
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று சொன்னது எனக்குத் தெரியவில்லை. அந்த கடிதம் இன்னும் வந்து சேரவில்லை, அவர் கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
நயினார் பதில்
அப்போது யார் உண்மையை சொல்லி இருக்கா, யார் பொய் சொல்லியிருக்கா என்பது உங்களுக்கு தெரியும். ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் தான் அவரை தொடர்பு கொண்டேன். முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள் நான் அவரை தொடர்பு கொண்டேன். இது முன்னாடி சட்டசபை நடக்கும் போது, பலமுறை அழைத்து இருக்கிறேன்.
தமிழிசை கூறியது என்ன
எனது உதவியாளர் நான் கூறி பலமுறை அழைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு குறையாக சொல்லி இருக்கிறார். நான் அவரை பற்றி குறை சொல்லமாட்டேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினை குறித்து முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், நயினார் நாகேந்திரனுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் குறித்து ஓபிஎஸ் கூறியதற்கு நான் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன். அதே வேளையில் ஓபிஎஸ், நயினார் குறித்து கூறிய குற்றச்சாட்டுகளை ஏற்கவும் மாட்டேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications