“செங்கோட்டையன் உடன் தினமும் பேசி வருகிறேன்.. விரைவில் சசிகலாவையும் சந்திப்பேன்” - ஓபிஎஸ் பேட்டி
சென்னை: "செங்கோட்டையன் உடன் தினசரி பேசிக்கொண்டிருக்கிறேன். சசிகலா, செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன். அந்த நல்ல நிகழ்வு உறுதியாக நடக்கும். அடுத்தகட்ட நடவடிக்கையை செங்கோட்டையன் சொன்ன பிறகு எனது கருத்தைச் சொல்வேன்" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்தச் சூழலில் அதிமுகவில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவே முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். அவரது கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில், செங்கோட்டையன் அதிரடியாக கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதியாக ஆதரவு அளிக்கிறேன். செங்கோட்டையனை உறுதியாக விரைவில் சந்திப்பேன். 10 நாட்கள் அவகாசம் முடிந்த பின்னர் அனைவரையும் அழைத்து பேசுவேன். செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்கத்தக்கது அல்ல, கட்சி ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார் செங்கோட்டையன். அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். செங்கோட்டையன் கெடு விதித்ததில் தவறில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அடுத்தகட்ட நடவடிக்கையை செங்கோட்டையன் சொன்னபிறகு எனது கருத்தைச் சொல்வேன். செங்கோட்டையன் உடன் தினசரி பேசிக்கொண்டிருக்கிறேன். நானும் பேசுகிறேன், அவரும் பேசுகிறார். சசிகலா, செங்கோட்டையன் ஆகியோருடன் விரைவில் சந்திப்பேன். அந்த நல்ல நிகழ்வு உறுதியாக நடக்கும். " எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications