இத கவனிச்சீங்களா? ஓபிஎஸின் மாற்றம்.. “இதான் டார்கெட்” பாய்ண்டை வட்டமிடும் எடப்பாடி தரப்பு
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்ததிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான காட்டமான விமர்சனங்களை முன்வைக்காமல் அமைதி காத்து வருகிறார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்து எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பல்வேறு தடைகளுக்கு பிறகு பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் ரெய்டுகள், வழக்குகள் என்று அவர் பாடு திண்டாட்டமாகவே உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனைகளை ஒருபக்கம் பார்த்துக்கொண்டே மறுபக்கம் வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் மத்தியில் நிரூபிக்க வைக்கும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன் விளைவாகவே தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக போராட்டங்களை நடத்தியது.

ஓ.பன்னீர்செல்வம்
இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். 9 மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது ஒருபுறம் இருக்க ஓ.பன்னீர்செல்வமோ, மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ட்விட்டரில் கோரிக்கை விடுத்ததோடு நிறுத்திக்கொண்டார். அதேபோல் ஆவின் பால் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

சைலண்ட் மோட்
இந்த பதிவுகளிலும் அரசை விமர்சிக்கும் வரிகள் இல்லாமல் கோரிக்கைகளாகவே இருந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டிய எதிர்ப்பை ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவு. ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் மீது முன்வைத்து வரும் குற்றச்சாட்டு, அவரை திமுக இயக்குகிறது என்பதுதான். அவர்கள் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே முதலமைச்சர் ஸ்டாலினை ரவீந்திரநாத் சந்தித்தது அமைந்தது.

திமுகவுடன் தொடர்பா?
பொதுக்குழுவின்போது ஓ.பி.எஸ். தரப்பினர் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியதற்கு தமிழ்நாடு அரசு உதவியதாக எடப்பாடி தரப்பினர் குற்றம்சாட்டினர். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டது அப்போது விவாதப்பொருளானது.

இலக்கு நிர்ணயம்
இதையெல்லாம் தொகுத்து திமுக ஓ.பி.எஸை இயக்குவதாக எடப்பாடி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்சியை கைப்பற்றுவதற்கும், பல்வேறு பிரச்சனைகளை சமாளிப்பதற்கும் ஆளும் கட்சியின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதாலேயே அரசை பகைத்துக்கொள்ளாமல், ஒரே இலக்குடன் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அதிமுகவை முழுமையாக ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றினால், அதன் பின்னர் அவர் எடுக்கும் நகர்வுகளை வைத்தே இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை உறுதி செய்யலாம்.












Click it and Unblock the Notifications