இடிக்குதே! எகிறி அடிக்கும் எடப்பாடி.. பதுங்கும் பன்னீர்! “புகாரை” நியாயப்படும் வகையில் அமைதியோ அமைதி
சென்னை: தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தீவிர போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமோ இது குறித்து எந்த எதிர்ப்புகளையும் பதிவு செய்யாமல் இருந்து வருகிறார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையிலான பிரச்சனை கடந்த 2 மாதங்களாக தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இதில் கவனம் செலுத்தியதால் எதிர்க்கட்சியாக அதிமுக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தவறியதுடன், திமுக அரசு மீதான விமர்சனங்கள், போராட்டங்களை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

அதிமுக உட்கட்சிப் பிரச்சனை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்து எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளுக்கு பிறகு பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் ரெய்டுகள், வழக்குகள் என்று அவர் பாடு திண்டாட்டமாகவே உள்ளது. இதற்கிடையே பாஜக தலைமையும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர்
அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனைகளை ஒருபக்கம் பார்த்துக்கொண்டே மறுபக்கம் வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் மத்தியில் பெயரெடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறாராம். குறிப்பாக பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடுவது தங்கள் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து அடுத்தக்கட்ட நகர்வுகளையும், அதிமுகவின் பலத்தையும் காட்ட அவர் முடிவு செய்துள்ளார்.

எடப்பாடி போராட்டம்
அதன் விளைவாகவே தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காலை அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். 9 மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு தலை சுற்றல் ஏற்பட்டதுதான் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் அமைதி
இது ஒருபுறம் இருக்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வமோ, மின் கட்டண உயர்வு திரும்பப்பெற ட்விட்டரில் கோரிக்கை விடுத்ததோடு ஓ.பன்னீர்செல்வம் நிறுத்திக்கொண்டார். அதிமுகவை முழுமையாக கைப்பற்றிய பின்னர் எதிர்க்கட்சி வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று ஓபிஎஸ் நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக எடப்பாடி அணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் வகையில் ஓ.பி.எஸின் தற்போதைய செயல்பாடுகள் இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் முணுமுணுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications