2026ல் விஜய் ஆட்சியா? இன்னும் அவர் இலக்கில் தெளிவில்லை.. ஓபிஎஸ் உடனே கொடுத்த ரிப்ளை!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் தெளிவில்லை என்றும் விஜய் தனது தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வைக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "பேரறிஞர் அண்ணாவின் வழியில் எதிர்வரும் சவால்களை சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்குவோம். அனைத்து நிலைகளில் இருந்தும் அதிமுக தோழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவிடத்திலிருந்து உறுதி ஏற்கிறோம். அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைப்பிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை தந்திருக்க மாட்டார்கள்." என்றார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "மத்திய அமைச்சர் அமித்ஷா திருமண வரவேற்பு நிகழ்வுக்காக வந்திருந்தார். அதில் கலந்து கொண்டேன். ஓ.பி.ரவீந்திரநாத்தின் பதிவு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறோம்." என்றார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்துப் பேசிய ஓபிஎஸ், "யார் அந்த சார் என்பது குறித்து எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தீவிர புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருந்து ஆளுங்கட்சி வெளிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என தடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. செல்போனை பறிமுதல் செய்வதும், வன்முறையும், அதிகார துஷ்பிரயோகங்களும் தீர்வாகாது.
சென்னை ஈசிஆர் விவகாரத்தில் யார் குற்றவாளிகள் என விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இசிஆர் விவகாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற உண்மை எல்லாருக்கும் தெரியும்." எனத் தெரிவித்தார்.
1967ல் ஏற்பட்ட அரசியல் அதிர்வு மீண்டும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் கூறி இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "விஜய் அரசியல் இயக்கம் தொடங்கி ஓராண்டு முடிவடைந்துள்ளது. அவர் எந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை.
தெளிவாக அவரது கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொன்னால் அதற்குப் பின்னால் அது குறித்து கருத்துகளைத் தெரிவிப்போம். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அனைவரும் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம், நாங்கள் தான் முதலமைச்சர் ஆகப் போகிறோம் என்று கூறுவார்கள். அதைத் தீர்மானிப்பது மக்களின் கடமை." என்றார்.
மேலும் பேசுகையில், ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications