மர்மமா இருக்கே! கேள்வி மட்டும் எடப்பாடிக்கு.. தீர்ப்பு சாதகமா வருதே! சந்தேகம் கிளப்பும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : "அதிமுக வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள் தீர்ப்பின்போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்ன?" என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, அதிமுக கொடி, கட்சி பெயர், சின்னத்தை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது எனக் கூறி வருகிறது ஈபிஎஸ் தரப்பு. அதேசமயம், தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் நாளை அதிமுக முப்பெரும் விழாவை நடத்துகிறார் ஓபிஎஸ். இந்த மாநாட்டில் கட்சி பெயர், கொடி அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொதிப்பு : திருச்சியில் நாளை நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு மாற்றத்திற்கான மாநாடு. ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்குவதாக திமிரெடுத்த முடிவினை எடப்பாடி எடுத்துள்ளார். இதனால் தொண்டர்கள் கொதிப்புடன் உள்ளனர்.
அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூற எடப்பாடி பழனிசாமிக்கு என்ன உரிமை இருக்கிறது? அதன் பேட்டன்ரைட் எடப்பாடி பழனிசாமியின் அப்பாவின் பெயரில் உள்ளதா? கொடி என்பது எங்கள் உரிமை. கோடிகளைக் காப்பாற்றுவதற்காக எடப்பாடி போராடுகிறார். கொடியையும், கொள்கைகளையும் காப்பதற்காக எங்கள் தொண்டர்கள் போராடுகிறார்கள்.

மர்மமா இருக்குதே : அதிமுக கொடியை சட்டையாகக்கூட தைத்து போட்டுக் கொள்வோம், யாரும் கேள்வி கேட்க முடியாது. எங்களைக் கொடியை பயன்படுத்த கூடாது என சொல்லும் எடப்பாடி, அதிமுக என்ற கட்சியையே பயன்படுத்தக் கூடாது. எடப்பாடி இல்லாத அதிமுகவை மலைக்கோட்டை மாநகரம் முன்னெழுதப் போகிறது. நன்றி மறத்தல், சூழ்ச்சி, வஞ்சகம் அனைத்தின் அடையாளமாக எடப்பாடி திகழ்கிறார்" எனக் காட்டமாக கூறினார்.
மேலும், "நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள் தீர்ப்பின்போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் மருது அழகுராஜ்.












Click it and Unblock the Notifications