இரட்டை இலை சின்னம் முடக்கம்.. எடப்பாடி பழனிசாமி மீது புகழேந்தி குற்றச்சாட்டு!
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் முடக்கப்பட்டால், அதற்கு எடப்பாடி பழனிசாமி காரணம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். அதுமட்டுமல்லாமல் பொதுக்குழுவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தனித்தனியே ஆலோசனை
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தேனியில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் ஆகியோர் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகழேந்தி பேச்சு
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வழக்கில் வெற்றிபெற்ற பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து வர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. தவறாக பேசுவதையே தொழிலாக கொண்டார்.

இரட்டை இலை முடக்கம்?
வரும் காலத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையம் அல்லது நீதிமன்றத்தில் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு. அதை காலம் மன்னிக்காது. அவரது பொதுச்செயலாளர் பதவியின் மீதான வெறி, சர்வாதிகாரம் உள்ளிட்டவையால் தான் இந்த சூழல் உருவாகியுள்ளது.

நிர்வாகிகளுக்கு அழைப்பு
இந்த சதிக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது வரும் காலத்தில் தெரிய வரும். கட்சியை இணைந்து நடத்த எடப்பாடி பழனிசாமி தயாராகவில்லை என்பது தெரிந்துவிட்டது. அதனை அதிமுக செயல் வீரர்களும், நிர்வாகிகளும் சிந்திக்க வேண்டும். கட்சியை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துவிட்டார். இனி அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications