ரொம்ப தூரத்துல இல்ல.. விரட்டியடிப்போம்.. ‘பொய் மூட்டை’ ஜெயக்குமார்.. வைத்திலிங்கம் அட்டாக்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம்.
சென்னை : பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்த நிலையில், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவைச் சந்தித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனர்.
இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்து, ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓபிஎஸ்ஸை அரவணைத்து துணை முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் ஈபிஎஸ் எனக் கூறினார். இந்நிலையில், அதற்கு பதிலடியாக அறிக்கை விடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
அந்த அறிக்கையில், பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம்.
மேலும், மக்கள் முடிவுக்கு மாறாக செயல்பட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றி பெறும்.
2017ஆம் ஆண்டு பழனிசாமியின் ஆட்சி கவிழாமல் இருந்ததுக்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications