ADMK: வெல்லமண்டி நடராஜனை தொடர்ந்து! அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
சென்னை: தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீஎஸ்ஸின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில் அவரது ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜனும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

முன்னாள் முதல்வர், அதிமுகவில் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என உச்சபட்ச பதவிகளை பெற்றவர் ஓபிஎஸ். ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் ஏற்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ், அதிமுகவை ஒருங்கிணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை மலர வைப்பதுதான் எனது லட்சியம் என பேசி வந்தார்.
ஆனால் அவரது அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேறி திமுகவில் இணைந்தனர். அது போல் ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தனியாக இருந்த ஓபிஎஸ், யாருடன் கூட்டணிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலினை தனது மகன் ஓபி ரவீந்திரநாத்துடன் போய் சந்தித்தார்.
மேலும் அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். இதனால் அவர் திமுகவில் இணைவார் அல்லது திமுகவுடன் கூட்டணி வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எப்படி அதிமுகவில் இணைவார் என்றும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஓபிஎஸ், ரவீந்திரநாத், ஐயப்பன் எம்எல்ஏ உள்பட தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் முதல்வர் ஸ்டாலினை, தளபதி என குறிப்பிட்டு ஓபிஎஸ் பிரஸ்மீட் கொடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுடன் அவரது ஆதரவாளர்கள் வந்துவிட்ட நிலையில் வெல்லமண்டி நடராஜனும், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் எங்கே என்ற கேள்வி எழுந்தது.
நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த வெல்லமண்டி நடராஜன், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அது போல் அண்மையில் சசிகலாவை சந்தித்ததாக சொல்லப்பட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்து கொண்டார். தன்னை நம்பி வந்தவர்களுக்காக தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்காமல் கடைசி வரை இழுத்தடித்து ஏமாற்றிய ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமானதை அவரது ஆதரவாளர்கள் சிலரே விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications