குறி தப்பாது.. ரெண்டே வாரம்.. ‘பாசிட்டிவ் ரிசல்ட்’ - நடத்திக்காட்டிய புள்ளிகள்.. ஓபிஎஸ் ஒரே குஷி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த அசைன்மென்ட்டை பத்தே நாட்களில் முடித்து பாசிட்டிவ் ரிசல்ட் காட்டியிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருக்கும் கே.பி.முனுசாமி மீது கடுமையான அப்செட்டில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு, முனுசாமி ஏரியாவை டார்கெட் செய்து வலை வீசி வருவதாக ஏற்கனவே நமது ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஒன்றிய சேர்மன் என பலர் ஓபிஎஸ் பக்கம் தாவியுள்ளனர்.
தீர்ப்புக்குப் பிறகு ஈபிஎஸ் தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தன் பக்கம் வந்து கொண்டிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாகம் கொடுத்துள்ளதாம்.
மாயத்தேவருக்கு மரியாதை! கிளம்பிய சசிகலா.. பயணத்தில் பன்னீர்செல்வம்! 'அவர்’ வருவாரா என எதிர்பார்ப்பு!
முனுசாமியால் அப்செட்
ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டிருந்த கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ்ஸுடன் இணைந்த பிறகு தான் ரீ-என்ட்ரி கிடைத்தது எனலாம். கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் தரப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்த நிலையில் தான், அவர் சமீபத்தில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலில் முழுமையாக ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். எதிர் முகாமுக்குச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஓபிஎஸ்ஸை கடுமையாகத் தாக்கியும் பேசி வந்தார் முனுசாமி. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசைன்மெண்ட்
இந்நிலையில் தான், இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூர் தனியார் ஹோட்டலில், ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் ஓபிஎஸ். அப்போது பலரும் முனுசாமியின் செயல்பாடு பற்றி உள்ளம் குமுறி பேசிய நிலையில், முனுசாமி ஆதரவாளர்களாக இருப்பவர்களை தம் பக்கம் இழுக்க அப்பகுதி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இதற்கான அசைன்மெண்ட் மேற்பார்வை மூத்த தலை ஒருவருக்கு வழங்கப்பட்டது.
சொந்த ஊர் சென்ற ஓபிஎஸ்
இதற்கிடையே, ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி சென்னையில் இருந்து பெரியகுளம் வந்து அவரது இல்லத்தில் தங்கியிருந்தார். ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து அவருடன் ஆலோசனை நடத்திச் சென்றனர்.
500க்கும் மேற்பட்டோர்
ஒரு வாரத்திற்கும் மேலாக சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தங்கி இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை வந்தார். சென்னை மயிலாப்பூர் தனியார் ஹோட்டலில் நேற்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓபிஎஸ். அப்போது விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், சூளகிரி ஒன்றிய சேர்மன் ஹேம்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். கே.பி.முனுசாமியின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்துள்ளது அவருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
பச்சோந்திகள்
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவிந்தராஜ், "கிருஷ்ணகிரியில் இருக்கும் கருங்காலிகள் இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பச்சோந்தித் தனமாக நேரத்திற்கு ஒருவாறு பேசி வருகிறார்கள். இயக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் கொதித்தெழுந்து ஓபிஎஸ் பக்கம் இணைந்துள்ளோம். இன்னும் பலர் ஓபிஎஸ் பக்கம் வர இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அசைன்மெண்ட் ரிசல்ட்
ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்ட திட்டப்படி, இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, கே.பி.முனுசாமியின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஒன்றிய சேர்மன் என முக்கிய நிர்வாகிகள் பலரை இழுத்துள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதன் மூலம் முனுசாமிக்கு ஷாக் கொடுத்துள்ளனர். தங்கள் வேலை இன்னும் முடியவில்லை என தொடர்ந்து, ஆதரவாளர்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறதாம் ஓபிஎஸ் தரப்பு. இதனால், கேபி.முனுசாமி அப்செட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.