ஓபிஎஸ் + டிடிவி + செங்கோட்டையன்? ராஜமாதா ’சின்னம்மா’ சசிகலா! தடதடக்கும் அதிமுக.. எடப்பாடிக்கு பிரஷர்
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சசிகலா அறிக்கை விட்ட அடுத்த நாளிலிருந்து ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து பேசி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள், ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி உள்ளிட்டோருடன் சீனியர்கள் ஒன்றிணைந்து சசிகலா தலைமையில் அணிசேர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் உட்கட்சி அரசியல் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. மிக நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது நான்காம் கட்டமாக மதுரையில் சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து, அதிமுகவில் ஒரு தரப்பு மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பாஜக கூட்டணி வேண்டும் என வலியுறுத்திய நிலையில், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது.

அதிமுக அரசியல்
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன் என அறிக்கை விட்டார் சசிகலா. அதிமுகவினர் இதற்கு பெரிய அளவில் ரியாக்ட் செய்யாத நிலையில், தற்போது அந்தக் கட்சியில் லேசாகப் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம், அதை நோக்கியே எனது பயணம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவில் இணைவதற்கு எனக்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை எனக் கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.
மீண்டும் சசிகலா
அடுத்த நாளே பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தனது ஆதரவு எப்போதுமே இருக்கும் என தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் செங்கோட்டையன் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் என கூறியிருப்பது அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவின் வரலாற்றில் ஏதாவது ஒரு தலைவர் நான் ஊடகங்களிடம் பேசப் போகிறேன் என்றாலே அது கட்சியை விட்டு விலகுவதாகத்தான் இருக்கும் என்கின்றனர் அதிமுக வரலாற்றை ஆராய்ந்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் கட்சியில் இருந்து விலகலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவிலோ திமுகவிலோ அவர் இணைய மாட்டார். ஓபிஎஸ், டிடிவி உடன் இணைந்து செயல்படுவார் என்கின்றனர் விவரம் அறிந்த அவரது ஆதரவாளர்கள். இது தொடர்பாக பேசிய போது, "ஆரம்பத்தில் முதலமைச்சராக வேண்டிய வாய்ப்பு செங்கோட்டையனுக்கு தான் வந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பதவி போனது. அதற்குப் பிறகு தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சீனியர்களை மதிக்காமல் செயல்பட்டு வந்தார்.
அதிமுக ஒன்றிணைவு
அதனால் தான் சிலர் திமுக பக்கம் தாவி விட்டனர். ஒரு சிலர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தற்போது பாஜக கூட்டணியால் பல சீனியர்கள் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் வேறு வழியின்றி தான் அதிமுகவில் தொடர்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடியை கழற்றிவிட்டு சசிகலாவை தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவில் இருக்கும் சில சீனியர்கள் மறைமுகமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரோடு செங்கோட்டையன் கைகோர்க்கலாம். மேலும் அவரும் தேர்தலில் விஜய் ஆதரவு நிலைப்பாட்டையும் செங்கோட்டையன் எடுக்கலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications