"செல்போனில் காட்டாதீங்க.. " ஓபிஎஸ்-க்கு ஒரே வரியில் நயினார் பதில்.. டக்குனு சீனுக்குள் வந்த அண்ணாமலை
ஈரோடு: பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய மெசேஜை ஓபிஎஸ் வெளிப்படையாகக் காட்டிய நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். இதனிடையே ஓபிஎஸ் கருத்து குறித்து நயினார் நாகேந்திரன் பேசத் தயாரான போது, அங்கிருந்து அண்ணாமலை உடனடியாக அழைத்து சென்ற சம்பவம் விவாதமாகி இருக்கிறது.
தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஓபிஎஸ்-க்கு கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஓபிஎஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் விரும்பி இருந்தால், எங்களிடம் கூறி இருக்கலாம். நாங்களே அனுமதி பெற்றுக் கொடுத்திருப்போம். அவர் விரும்பினால் ஆகஸ்ட் 26ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும் போது, சந்திக்க ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்தார். இந்த வார்த்தை ஓபிஎஸ் தரப்பை டென்ஷனாக்கி இருக்கிறது.
இதன்பின் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை தொலைப்பேசியில் அழைத்த போதும் எடுக்கவில்லை.. 2 முறை ஓபிஎஸ் மொபைலில் இருந்து மெசேஜ் அனுப்பிய போதும் கண்டுகொள்ளவில்லை. உண்மையைப் பேசுங்கள் என்று ஓபிஎஸ் காட்டமாகப் பதில் அளித்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், அப்படி இருந்தால் ஓபிஎஸ் ஆதாரத்தை காட்டட்டும் என்று கூற, உடனடியாக ஓபிஎஸ் தனது மொபைலில் இருந்த மெசேஜை காட்டினார்.
அதில் 2 முறை நயினார் நாகேந்திரனுக்கு ஓபிஎஸ் தரப்பில் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யக் கோரி மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஜூலை 24ஆம் தேதியே அந்த மெசேஜ் அனுப்பியதும் உறுதியானது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், பாஜகவினரோடு தீரன் சின்னமலையின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது நயினார் நாகேந்திரனுடன் அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்டோரும் இருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை பேசுகையில், நயினார் நாகேந்திரன் உடனடியாக நெல்லைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பிறகு பதில் சொல்வார். இப்போது அரசியல் வேண்டாம் என்று கூறினார்.
ஆனாலும் செய்தியாளர்கள் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்று கேட்க நயினார் நாகேந்திரன் பதில் அளிக்கத் தயாரானார். அப்போது, செல்ஃபோனில் காட்ட வேண்டாம்.. ஆதாரமாகக் கொடுங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். இதன்பின் நயினார் நாகேந்திரனை பேசவிடாமல் அண்ணாமலை அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications