சென்னை படப்பையில் ஹைடெக் கொள்ளை.. தடயம் இன்றி ஏடிஎம்மில் மாயமான பல லட்சம்.. வங்கி அதிகாரிகள் 'ஷாக்'
சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் ஏடிஎம் எந்திரத்தில் நூதன முறையில் ரூ.13 லட்சத்தை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த மர்ம நபர் ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 100 எடுத்தால் ரூ.1000 வருகிற மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி அபேஸ் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில், வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகிலேயே அந்த வங்கிக்கான ஏடிஎம் மையம் உள்ளது. வழக்கமாக வாடிக்கையாளர்கள் இந்த ஏடிஎம்மில் தான் பணம் எடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த ஏடிஎமில் பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களுக்கு பணம் இல்லை என்று வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வங்கியில் இது தொடர்பாக தெரிவித்தனர். ஆனால் கடந்த 6 ஆம் தேதி தான் அந்த ஏடிஎம் எந்திரத்தில் ரூ.23.35 லட்சம் போடப்பட்டு உள்ளது. இதனால் எப்படி இதற்குள் இந்த பணம் இல்லாமல் போயிருக்கும் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் ஏடிஎம் எந்திரத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி அந்த ஏடிஎம் எந்திரத்தில் நம்பர் லாக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் யாரோ மோசடி நபர் தான் இதனை அரங்கேற்றி இருப்பதை வங்கி அதிகாரிகள் உணர்ந்தனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில், கடந்த 6 ஆம் தேதி நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
இதேபோன்று அடுத்த நாளான, கடந்த 7 ஆம் தேதி ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். முதலில் ரகசிய பின் நம்பர் சிஸ்டம் எண்களை பிரித்து ஏடிஎம். எந்திரத்தில் ரூ.100 எடுத்தால் ரூ.1000 வருவது போன்று எந்திர குறியீட்டு எண்ணில் திருத்தம் செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நம்பர் பிளேட் இல்லாத காரில் வரும் மர்ம நபர் ஒருவர் தான், அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கொள்ளை நபர், ஏடிஎம் இன் ரகசிய எண்களை தெரிந்து கைவரிசை காட்டியிருப்பதால், வங்கியுடன் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் இதுதொடர்பாக வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications