SIR: தமிழகத்தின் மிகப் பெரிய சட்டசபை தொகுதியான சோழிங்கநல்லூரில் இத்தனை பேர் நீக்கமா?
சென்னை: தமிழகத்தின் மிகப் பெரிய சட்டசபை தொகுதியான சோழிங்கநல்லூரில் 2.18 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 4,84,005 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளன.
பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்த பணிகள் கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

தற்போது தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களது அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்பு வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தின் மிகப் பெரிய சட்டசபை தொகுதியான சோழிங்கநல்லூரில் 2.18 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஐஆருக்கு முன்பு 7,02,450 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்கு பின் 4,84,005 ஆக குறைந்துள்ளது. இதில் 2,18,444 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதி தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது.
முன்னர் தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளை பிரித்து சோழிங்கநல்லூர் தொகுதி உருவானது. அதாவது தாம்பரம் வட்டம் (பகுதி), நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.
அது போல் புழுதிவாக்கம் (உள்ளகரம்), பெருங்குடி, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் இந்த சட்டசபை தொகுதிக்குள் அடங்கும்.
சோழிங்கநல்லூருக்கு அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதிதான் பெரிய தொகுதி. அது போல் தமிழகத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம் தொகுதி உள்ளது.
சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25,79,676 பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளன. எஸ்ஐஆருக்கு முன்பு 40,04,694 பேராக இருந்த வாக்காளர்கள் தற்போது குறைந்துள்ளது. அந்த 40 லட்சத்தில், 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இறந்த வாக்காளர்கள் 1,56,555 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் 27,328, குடிபெயர்ந்தோர் 12,22,164 பேரும், இரட்டை பதிவுகள் 18,772 பேர் என மொத்தம் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications