100 கார்களில் 500 அதிமுக நிர்வாகிகள்! 'சாது மிரண்டால் காடு கொள்ளாது'! கெத்து காட்டும் செங்கோட்டையன்!
சென்னை: ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டிற்கு 100- க்கும் மேற்பட்ட கார்களில் 500- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தினமும் அவரது வீட்டிற்கு கார்கள் வந்து செல்வதால் அந்த பகுதியே பிஸியாகி போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் செங்கோட்டையன் நெகிழ்ந்து போயுள்ளாராம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைவிட செங்கோட்டையன் சீனியர் ஹேண்ட்! முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம்பெற்றிருந்தார். இவர் அண்மைக்காலமாக அதிமுக தலைமைக்கு எதிராக திரும்பியுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி மனம் விட்டு பேசுகிறேன் என கூறி சில விஷயங்களை அவர் பேசத் தொடங்கினார். அதன் சாராம்சம் என்னவென்றால் கட்சி உடையக் கூடாது, அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள் என்பதுதான்.
ஒன்றிணைந்த அதிமுக
அந்த வழியில் அதிமுக சில அணிகளாக உடைந்து கிடக்கும் நிலையில், கட்சியிலிருந்து பிரிந்து கிடந்தவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்த செங்கோட்டையன், பொதுச் செயலாளருக்கே 10 நாள் கெடு விதித்திருந்தார். இது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஒரு வேளை ஒன்றுபட்ட அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி நோ சொன்னால், தன்னை போன்ற மனநிலையுள்ள நபர்களுடன் ஆலோசனை நடத்துவாகவும் தெரிவித்திருந்தார்.
வேடிக்கை பார்க்காத இபிஎஸ்
இந்த நிலையில் செங்கோட்டையன் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் எல்லாரும் பேசத் தொடங்கிவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். இதனால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பொங்கினர். தங்கள் பதவிகளையும் பறித்துவிடுங்கள் என தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர். செங்கோட்டையனின் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
செங்கோட்டையன் வீட்டிற்கு படை
இந்த நகர்வுகள் செங்கோட்டையனுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருடைய வீட்டிற்கு அவ்வப்போது நிர்வாகிகள் வருவதும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதுமாக செங்கோட்டையன் இருக்கிறார்.
500 பேர்
இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கார்களில் 500-க்கும் மேற்பட்டோர், செங்கோட்டையன் வீட்டிற்கு வந்து அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தப்பு கணக்கு போட்ட செங்கோட்டையன்
பதவியை பறித்தால் செங்கோட்டையன் அமைதியாகிவிடுவார் என எடப்பாடி பழனிசாமி கருதியிருந்த நிலையில் தினந்தோறும் செங்கோட்டையனுக்கு ஆதரவு பல்கி வருவதை கட்சியினர் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வுகளை வைத்து அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவாரா என்பது தெரியும்.
புஸ்ஸா?
எது எப்படியாக இருந்தாலும் செங்கோட்டையன் வசிக்கும் குள்ளம்பாளையம் தற்போது அதிமுகவினரை தாண்டி செய்திகளில் அதிகம் இடம் பெற்று வருகிறது. அங்கு சர்ரென வரும் கார்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. பார்ப்போம்! இந்த "ஹைப்" விஸ்வரூபம் எடுக்குமா இல்லை நமத்து போன பட்டாசு போல் புஸ்ஸாகிவிடுமா என்பதை!












Click it and Unblock the Notifications