ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க.. செம திட்டம்.. தமிழ்நாடு அரசு உருவாக்கிய புதிய ஆக்சிஜன் ஆணையர் பதவி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ம் அலை பரவலின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கேஸ்கள் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 1,891 கேஸ்கள் மட்டுமே பதிவாகின.
தமிழ்நாட்டில் தற்போது நிலவரப்படி 26,158 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளது. மூன்றாம் அலை பாதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணம்.. மத்திய இணை அமைச்சருக்கு காங்., சிபிஐ கட்சிகள் உரிமை மீறல் நோட்டீஸ்
மூன்றாம் அலை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தாக்கினால் அப்போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் இதற்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட அரசு மருத்துமனைகளிலேயே பல இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
வெளி மாவட்டம்
இதனால் ஆக்சிஜன் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தற்போது புதிதாக ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க, ஆக்சிஜனை முறையாக மாவட்டங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்க ஆக்சிஜன் ஆணையர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் நியமனம்
இதற்கான ஆணையர் விரைவில் நியமிக்கப்படுவார். இவர்தான் இனி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து முடிவுகளை எடுப்பது, உத்தரவுகளை வெளியிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இந்தியாவில் முதல்முறை மாநிலம் ஒன்றில் இப்படி ஒரு பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது தமிழ்நாடு 80,000 என்ற அளவில் தயார் நிலையில் உள்ளது.
மெட்ரிக் டன்
அதோடு ஏற்கனவே ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் அளவு உயர்த்தப்படும். இதனால் உடனடி ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.