தமிழக காங். கட்சியில் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு பதவி! பரபர பின்னணி
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டதன் பின்னணியில் திமுகவுடனான தொகுதி பங்கீடு விவகாரம் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் இன்று திடீரென நீக்கப்பட்டு அந்த பதவிக்கு கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செயல் தலைவர்களாக ஹெச். வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அழகிரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்படுபவர்.
புதிதாக பதவிக்கு வந்து உள்ளவர்களில் தலைவர் மற்றும் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் சிதம்பரத்தின் ஆதரவாளர்களாக அறியப்படுபவர்கள் என்பதால், இந்த நியமனம் தொடர்பாக பல்வேறு வினாக்கள் எழுந்துள்ளன. அதேபோல விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஆவார்.
திமுக தலைமைக்கும் திருநாவுக்கரசு க்கும் நடுவே நல்ல ஒரு உறவு பேணப்படவில்லை என்று இரு கட்சிகளிலும் நெருக்கமாக இருக்கக்கூடிய வட்டார தகவல்கள் நீண்டகாலமாகவே தெரிவித்து வந்தன.
காங்கிரஸ் கட்சி நடத்திய சில கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் செல்லாதது, மற்றும் திமுக கூட்டங்களுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதி ஆகி விட்டாலும் கூட, தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் முடிவெடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதற்கு திருநாவுக்கரசரின் தலைமை ஒரு காரணம் என்று காங்கிரஸ் மேலிட தலைமைக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையில் தான் திமுக தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்படும் சிதம்பரத்தின் ஆதரவாளர் அழகிரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இனிமேல் இரு கட்சிகள் நடுவேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம் திருநாவுக்கரசர் நிலைமை என்னாகும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.












Click it and Unblock the Notifications