மகளிருக்கான 33% இடஒதுக்கீடு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.. ப.சிதம்பரம் கருத்து
சென்னை: மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை நிகழ்வு அனைத்தும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

நேற்று முதல் நாள் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.
ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இப்படியாக 1990களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரில் ஒருவரான ப.சிதம்பரம், "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டுவந்தால், அது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். கடந்த 9-3-2010 அன்று ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது ஐ.மு.கூ அரசாங்கத்தின் போதுதான் என்பதை நினைவில் கொள்க.
தற்போது பாஜக ஆட்சியின் 10வது ஆண்டில் மசோதா சாக இருந்த நிலையில், புதைத்து வைத்திருந்த மசோதாவை பாஜக மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த மேசோதாவை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படியாக இதற்காக ஒவ்வொரு தருணத்திலும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தது. நடப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்புவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications