திமுகவுக்குத்தான் ஓட்டு போட்டேன்! என்ன செய்யுறது? ஆனால் 2026ல்.. பா.ரஞ்சித் பரபரப்பு தகவல்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரா் பதவிக்கு நீங்கள் வருவீர்களா என இயக்குநர் பா.ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். திமுக அரசை விமர்சித்து தான் பதிவு செய்த எக்ஸ் பதிவு குறித்து ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பா ரஞ்சித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் படி தண்டனை கிடைத்தாலே பெரிய விஷயம்தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறது என்பது குறித்தும் இந்த கொலையில் எதற்காக நடந்தது என்பது குறித்தும் நான் ஏற்கெனவே காவல் துறையில் தெரிவித்துள்ளேன்.

காவல் துறையும் உண்மையான குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் 3 அல்லது 4 தினங்களில் அவர்களை கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். விசாரணையும் பல கட்டங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்த கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள். இந்த கொலைக்கு இத்தனை பெரிய தொகையை யார் கொடுத்து நடத்தியிருப்பார்கள் என்ற கேள்விகள் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
நீங்கள் கேட்டது போல் நான் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ட்விட்டரில் பதிவு செய்ததை பார்த்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் இது குறித்து சமூகவலைதளங்களில் பார்த்து அரசு சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவே நான் உணர்கிறேன். நான் ஏற்கெனவே நேரடி அரசியல்தான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகும் விருப்பம் இல்லை. போலீஸார் செய்த என்கவுன்ட்டரை நான் ஆக்கப்பூர்வமான விஷயமாகவே பார்க்கவில்லை. குற்றவாளிகள் செய்த குற்றத்தை நீதிமன்றத்தில் வைத்து நிரூபிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். என்கவுன்ட்டருக்கு எப்போதும் நான் எதிரானவன்தான்.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை குறித்து பல்வேறு கருத்துகள் நடந்து வருகின்றன. எங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை என்றுதான் கருதுகிறோம். ஆனால் காவல் துறையின் விசாரணையின் போக்கை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் சிபிஐ விசாரணையை தற்போது கோராமல் இருக்கிறோம்.
அந்த விசாரணை சரியான திசையை நோக்கி செல்கிறதா என்பதை கவனித்து வருகிறோம். போலீஸார் கண்டுபிடிக்கும் உண்மை நிலையில் எங்களுக்கு சந்தேகம் இருந்தால் அடுத்த கட்ட கோரிக்கையை நோக்கி நாங்கள் நகர்வோம்.
அதிமுக ஆட்சியிலும் தலித்துகள் தாக்கப்பட்ட போது எதிர்க்கட்சியான திமுக பெரும் கண்டனத்தை பதிவு செய்தது. ஆனால் அதே திமுக தற்போது ஆளும் கட்சியாக வந்த போதும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தீர்க்கப்படவில்லை. இதுகுறித்த விமர்சனங்களை நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.
தலித்துகள் மீதான தாக்குதலை தவிர்க்க அரசு நிர்வாக ரீதியாக சில வேலைகளை செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள்தான் எல்லா தரப்பு சமூக மக்களுக்கும் ஆதரவாக செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். ஏனென்றால் அவை எல்லாம் ஓட்டாக மாறுகின்றன. ஆனால் அதிகாரிகளுக்கு எந்த மக்களின் ஆதரவும் தேவையில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் நிற்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கல் எதிர்பார்க்காத ஆட்கள் எல்லாம் உள்ளே வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த விசாரணை சரியான அளவில் போய் சேர வேண்டும் என்பதுதான் என்னோட நம்பிக்கை. நான் திமுகவுக்குத்தான் ஓட்டு போட்டேன். தலித்துக்களுக்கு எதிரான பிரச்சினை மாற வேண்டும் என நினைத்துதான் ஓட்டு போட்டேன். ஆனால் 2026 ஆம் ஆண்டு எனது முடிவு மாறினாலும் மாறும். இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications