சார்பட்டா : கள்ள கடத்தல், சாராயம் காய்ச்சுதல்.. இயக்குநர் ரஞ்சித் முன்வைக்கும் குறியீடு அதிமுகவையா?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் பொதுவாகவே அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. விளையாட்டு தொடர்பான திரைப்படங்களில் குறிப்பிட்ட படமாக சார்பட்டா போற்றப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவில் இதுவரை இலைமறை காயாக சொல்லப்பட்ட நிகழ் அரசியலை பகிரங்கமாக பேசியிருக்கிறது சார்பாட்டா திரைப்படம்.
Recommended Video
திரைப்படத்தின் தொடக்கம் முதலே கறுப்பு- சிவப்பு மிடுக்கு துண்டுடன் பசுபதி வலம் வருகிறார். வெளிப்படையாக திமுகவை பற்றி பேசப்படுகிறது. திமுகவின் உதயசூரியன் சின்னம் காட்டப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சின்னங்களும் துண்டுகளும் பகிரங்கமாக காட்டப்பட்டுள்ளன. 1975 அவசரநிலை பிரகடனம் தொடர்பான காட்சிகளில் பட்டவர்த்தனமாகவே அரசியல் பேசுகிறது சார்பட்டா திரைப்படம்.
திமுக பெருமிதம்
நான் திமுககாரன் என்பதில் பெருமைப்படுறவன்; யாருக்கும் பயப்படமாட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி பசுபதி பேசும் காட்சிகள் திமுக உடன்பிறப்புகளை துள்ள வைக்கிறது. அதேபோல் எமர்ஜென்சி கைது காட்சிகள், கருணாநிதி மகனையும் கைது செய்துட்டாங்களாம் என பேசும் காட்சிகளும் வெளிப்படையாகவே வைத்துள்ளனர்.
ஒரிஜனல் முரசொலி
சிறையில் இருந்து வெளியே வரும் பசுபதி கையில் முரசொலி நாளிதழ், எமர்ஜென்சி காலத்தில் வெளியான ஒரிஜனல்தான். பத்திரிகைகள் மீதான எமர்ஜென்சி ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் வகையில் விளக்கெண்ணெய் உடலுக்கு நல்லது என தலைப்பு செய்தியாக போட்டார் கருணாநிதி. அந்த தேதியிட்ட ஒரிஜனல் முரசொலியும் இடம்பெற்றுள்ளது.
அதிமுகவா?
திமுக, காங்கிரஸ் பற்றி பேசுகிற சார்பட்டா திரைப்படம் அதிமுகவை உச்சரிக்கவில்லை. அதேநேரத்தில் சில காட்சிகள் ஆழப்பதிகின்றன- எதிர்மறையாக. எமர்ஜென்சி காலத்தில் பசுபதியின் மகன் கலையரசனை எம்ஜிஆரின் நடிப்பு கதாபாத்திர சாயலில் இருக்கும் நபர், எம்ஜிஆர் பாடலைப் பாடி, கள்ளக் கடத்தல், சாராயம் காய்ச்சுதல் பக்கம் இழுத்துச் செல்வார். கதாநாயகன் ஆர்யாவும் அந்த பக்கம் சாய்ந்துவிடுவார்.
எம்ஜிஆர் படங்கள்
இதனால் கதாநாயகன் ஆர்யாவின் வாழ்க்கையில் திசைமாறுதல்கள் உருவாகின்றன. சிறையில் இருந்து அதே கறுப்பு-சிவப்பு மடிப்பு கலையாத மிடுக்கு துண்டுடன் வெளியே வரும் பசுபதி, கலையரசன்- ஆர்யா வரவேற்பை புறக்கணித்துவிட்டு தம்மாதூண்டு மாலை வாங்கி கொடுத்த திமுக தொண்டனின் மாலையை கழுத்தில் போட்டுக் கொள்வார். பசுபதி வீட்டுக்கு திரும்பும் போது எம்ஜிஆர் படங்கள் பிரேம் செய்து மாட்டப்பட்டிருப்பது கண்ணில்படுவதாகவும் காட்டப்பட்டிருக்கும்.
பா.ரஞ்சித் சொல்ல வருவதா?
இப்படியான குறியீடுகள் மூலம் எமர்ஜ்னெசியை "எம்ஜிஆரும் அதிமுகவும் ஆதரிக்கவில்லை; கள்ளக் கடத்தல், சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களில் போலீசார் துணையுடன் அப்போது வடசென்னையில் அதிமுகவினர் ஈடுபட்டனர்" என்பதைத்தான் சொல்ல வருகிறாரா? என்பதை பா. ரஞ்சித்தான் விளக்க வேண்டும்.