பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பா? பாஜக நிர்வாகிகள் மீது கோவில் நிர்வாகம் போலீசில் புகார்!
சென்னை: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் தான் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்கி வருவதாக பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி செல்வம், செல்வக்குமார் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அவர்கள் மீது கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் தான் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்கி வருவதாக சமூக ஊடகங்களில் நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “X சமூக தளத்தில், வினோஜ் பி செல்வம், மற்றும் செல்வக்குமார் ஆகியோர் "திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் A.R.Foods நிறுவனம் தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது" என்றும், "திருப்பதி வட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்" என்றும், பழதி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பக்தர்களை ஏமாற்றும் பொருட்டும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு அவதூறு செய்திகளை மேற்படி இரு நபர்களும் பரப்பியுள்ளனர்.
அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகத் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தயார் செய்யப்படும் தரமான பஞ்சாமிர்தத்தினை அருட்பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர். பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்குத் தேவையான வாழைப்பழம். நாட்டுச்சர்க்கரை, தேன். பேரீச்சம்பழம், ஏலக்காய், கற்கண்டு மற்றும் நெய் ஆகிய முதல்தரமான மூலப்பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் நெய்யினை திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் பழனி திருக்கோயிலின் பஞ்சாமிர்த தயாரிப்பினை அவ்வப்போது உணவுப் பாதுகாப்பு துறையால் தரப்பரிசோதனை செய்து வரப்படுகிறது. பஞ்சாமிர்த தயாரிப்பு மூலப்பொருட்களில் எவ்வித கலப்பட பொருள்களோ, தரம் குறைந்த பொருள்களோ இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையால் எப்போதும் தெரிவிக்கப்பட்டதில்லை. மேலும் மேற்படி அவதூறு செய்திகளைப் பரப்பிய நபர்கள் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பழனி திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு தீய உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பக்தர்களையும் பொதுமக்களையும் திருக்கோயில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக ஊடகங்களில் எவரும் வெளியிடவோ பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications