பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பிளாட் போட்டவருக்கு பதவி உயர்வு.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பிளாட் போட்ட நவீந்திரநாத் தற்பொழுது திமுக ஆட்சியில் துணை பதிவுத்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில்," பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பிளாட் போட்ட நவீந்திரநாத். இதற்கு பரிசாக அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலா சாமி IAS தற்பொழுது இவருக்கு துணை பதிவுத்துறை தலைவர் என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கின்றனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சர்வே எண் 429/2007 இல் அரசாங்கத்தால் GO போடப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அந்த அரசாங்கம் பள்ளிக்கரணை சதுப்பு நில சர்வே எண்ணை சைதாப்பேட்டை இணை ஒன்று சார் பதிவாளராக இருந்த பொழுது 2011 , 2012 இல் 10547/2011 மற்றும் 802/2012 ஆவணம் மூலம் தனியாருக்கு பதிவுசெய்து கொடுத்த மகான் திரு நவீந்திரநாத்.
மேலும் 5 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வருவாய்த்துறை ரெக்கார்டில் இல்லாத சர்வே எண் 657/3A5 என்று ஒன்றை மோசடியாக உருவாக்கி அதன் மூலமாக சதுப்பு நிலத்தை ஆவண எண் 5939/2011 மூலம் தனியாருக்கு மோசடியாக பதிவு செய்தவர் திரு நவீந்திரநாத். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மோசடியாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெளிவாக 2021 இல் கூறியுள்ளது.
இவர் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் ஜனவரி 2022-ல் தமிழ்நாடு அரசுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அனுப்பி இருந்தோம். ஆனால் இவரை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள் இதுபோன்ற மோசடியாக பதிவு செய்பவருக்கு பதவி உயர்வு கொடுத்து ஊழல்வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறையில் அரணாக உள்ளனர். இந்தத் துறை ஏன் மாஃபியா துறையாக இயங்கி வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்" இவ்வாறு அறப்போர் இயக்கம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு என்ன? : இதனிடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சேகர் என்பவர் 2021-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தொடர்ந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் கடந்த இரண்டு நாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஆயிரத்து 87 ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். அதன்படி, 149 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, மறு குடியமர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தமிழக அரசின் இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக இடம் ஒதுக்குவது ஆக்கிரமிப்பாளர்களை மேலும் ஊக்கப்படுத்தவே செய்யும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்டாமல் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல் ஊக்கப்படுத்தினால், 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி, ராணுவத்தினர் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும்" என்று எச்சரித்தனர்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டின் துரோகிகள் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications