இனி தி.நகரில் டிராபிக் இருக்காது! சென்னையின் 2வது பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக மாறும் பனகல் பார்க்
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தி.நகர் முதன்மையானது. இந்நிலையில் டிராபிக்கை குறைக்கும் நோக்கில், இங்கு அமைய உள்ள பனகல் பார்க் மெட்ரோ நிலையம், சென்னையின் 2வது பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில், “சென்னையை பொறுத்தவரை, பூமிக்கடியில் மெட்ரோ ரயில் நிலையத்தை அதிக அளவில் கட்டிக்கொண்டிருக்கிறோம். காரிடார் 4ல், கட்டப்பட்டு வரும் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம்தான் சென்னையின் பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக இருக்கும். இதன் அகலம் 30 மீ, நீளம் 413 மீ என்கிற அளவில் இருக்கும். இதற்கடுத்து பெரிய மெட்ரோ நிலையம் எனில் அது தி.நகரில் அமைய உள்ள பனகல் பார்க் மெட்ரோதான்.

பூந்தமல்லியில் இருந்து வரும் மெட்ரோ ரயில்கள் இங்கு கிராஸ் ஓவர் செய்யப்படும். கிராஸ் ஓவர் என்பது வழித்தடம் மாற்றப்படுவதற்கான இடம். எனவே இதற்கேற்றார் போல ரயில் நிலையத்தின் நீளம் விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தமாக 320 மீ நீளம் இந்த ரயில் நிலையம் இருக்கும். ஒவ்வொரு 7-8 கி.மீ தொலைவுக்கு கிராஸ் ஓவர் அமைக்கப்படும். அந்த வகையில் தி.நகரில் கிராஸ் ஓவர் அமைந்திருக்கிறது. பனகல் பார்க் மெட்ரோவிலிருந்து ரயில் புறப்பட்டுவிட்டால் மீண்டும் கலைங்கரை விளக்கத்தில்தான் ரயிலை திருப்ப முடியும்.
காரிடார் 4ல் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலைய வழித்தடத்தில், தி.நகர் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை பூமிக்கடியில் ரயில் செல்லும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது தற்போது பனகல் பார்க்கின் 40% இடத்தை நாங்கள் ஆக்கிரமித்திருக்கிறோம். இதற்காக மரங்கள் சில அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மெட்ரோ நிலையம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மீண்டும் அந்த பகுதிகளில் மரங்களை வளர்க்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டமைப்பை மாற்றியிருக்கிறோம்.
இப்படி செய்வதன் மூலம் பனகல் பார்க் மீண்டும் அதே பழைய எழிலுடன் உருவாகும். இதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்து பார்த்து செய்து வருகிறோம். சென்னையின் வேறு எந்த ரயில் நிலையத்தை விட பனகல் பார்க் ரயில் நிலையம் மிகவும் பொலிவுடன் இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது. இந்த ரயில் நிலையத்தின் ஒரு பகுதியை வருமானத்திற்கானதாக மாற்றியிருக்கிறோம். அதாவது, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை விரிவாக ஏற்படுத்தியுள்ளோம்.
சென்னையின் மற்ற இடங்களை விட தி.நகரில் பார்க்கிங் வசதிக்கான தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, அதற்கேற்றார் போல நாங்கள் திட்டங்களை வகுத்திருக்கிறோம்.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், பனகல் பார்க் மெட்ரோவில் 6 என்ரி-எக்ஸிட் இருக்கிறது. ஜிஎன் செட்டி ரோ, நார்த் உஸ்மான் ரோடு, சவுத் உஸ்மான் ரோடு, போத்தீஸ் பக்கமிருந்து என்ட்ரி ஆகலாம். இப்படி பல முனைகளிலிருந்து பயணிகள் உள்ளே நுழைவதற்கு ஏற்றார்போல வழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் 300-400 பேர் வரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் போக முடியும்” என்று சன் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications