பானிபூரி சாப்பிட்டா ஏப்பம் தானே வரும்..இப்போ கேன்சர் வருதாம்? கதிகலங்கிய கர்நாடகா.. தமிழகத்தில் உஷார்
சென்னை: கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பானி பூரி மற்றும் அதன் உப பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் பானி பூரி கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
பாரம்பரிய உணவு வகைகளை விட்டு வெகு தூரம் சென்று விட்ட மனிதன் தற்போது துரித உணவு வகைகளை நாடி வருகிறான். குறிப்பாக ஷவர்மா, நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட சாலையோர துரித உணவு கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

பரோட்டாவும் பல ஆண்டுகளாகவே துரித உணவு பிரியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அன்றாட செய்திகளில் உணவு விஷமாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பது துரித உணவு பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
புரோட்டா சாப்பிட்ட இளைஞர் பலி, ஃபிரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுமி பலி, ஷவர்மா சாப்பிட்ட மாணவன் பலி, பஞ்சுமிட்டாயில் ரசாயன வேதி பொருட்கள் என அடுத்தடுத்து பல செய்திகள் வெளியாகி இருப்பது துரித உணவு பிரியர்களையும் அவற்றை சாப்பிடும் குழந்தைகளின் பெற்றோர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் பானி பூரி பிரியர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பானி பூரி கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிகளை புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடகா முழுவதிலும் இருக்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகளில் கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 250 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றில் 18 மாதிரிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை எனவும், 41 மாதிரிகளில் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்க கூடிய ரசாயனங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பானி பூரி தொடர்ந்து அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கி சுவைக்கப்படும் ஷவர்மாவிலும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார். இது தொடர்ந்து கர்நாடகா முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தேசிய செய்தியாகியிருக்கிறது.
ஏற்கனவே உணவுப்பொருட்கள் விஷமாகி வரும் நிலையில் பாணி பூரியும் இப்படியா என உணவு பிரியர்கள் நொந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திலும் பானிபூரி கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த காலங்களில் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஷவர்ம மரணங்கள் ஏற்பட்டபோது தமிழகத்திலும் சோதனைத் தீவிர படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பானிபூரி விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருக்கும் பானி பூரி கடைகள் உணவகங்களில் சோதனை நடத்தி மாதிரிகளை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications