10 எம்பி தொகுதிகளா? டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸுமா? அவங்களும் வருவாங்களா? பண்ருட்டியார் என்ன சொல்கிறார்
சென்னை: 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஓபிஎஸ், தினகரன் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோஷ்டி இல்லாத அரசியல் கட்சி எங்கே என கேட்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பிரச்சினை எழுந்த போது அதிமுக உடைந்தது. தற்போது ஓபிஎஸ் கையைவிட்டு நழுவிவிட்டது.
இதற்கு காரணம் ஒற்றைத் தலைமையை எதிர்த்து ஓபிஎஸ் எத்தனையோ வழக்குகளை போட்ட போதிலும் அதை சுக்குநூறாக்கி வெளியே வந்தவர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இடைக்கால பொதுச் செயலாளராகி தற்போது தேர்தல் நடத்தி அதிமுகவின் பொதுச் செயலாளராகிவிட்டார்.

இதன் மூலம் கட்சி எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை ஏற்றது. இந்த நிலையில் தனித்து விடப்பட்டோம் என உணர்ந்த ஓபிஎஸ் ஒரு கட்டத்தில் தினகரனுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிமுகவை தீயவர்களிடம் இருந்து மீட்போம் என சூளுரைத்துள்ளனர்.
இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கொடநாடு எஸ்டேட் வழக்கு. இதில் எடப்பாடி பழனிசாமி சிக்கினால் கட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என ஓபிஎஸ், தினகரன் நினைக்கிறார்கள். இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று வருவோம் என திமுக கூறிய நிலையில் ஆனால் அது போல் எதுவும் இதுவரை நடக்கவில்லை.
இதனால் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி வரும் 1ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக தனது ஆதரவை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேனியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து டிடிவி தினகரன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தினர் என்பதால் இவர்களது இணைப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போது அந்ச சமூகத்தினரின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் என்கிறார்கள்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைக்கப்படாத சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருந்து. அதன்பேரில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் ஓபிஎஸ்ஸோ பாஜகவே தன்னுடனான உறவை முறித்துக் கொள்ளும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாகவே இருப்பேன் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
அது போல் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் எம்பி டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் அதிமுக மக்களவைத் தலைவர் என்ற குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன நெருக்கம் காட்டுவதால் ஓபிஎஸ்ஸும் தினகரனும் கைகோர்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
கொடநாடு கொள்ளை கொலை ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸுடன் தினகரனும் கலந்து கொள்ளவுள்ளதால் இருவரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது. தென் மாவட்டங்களில் இவர்கள் சமூகம் வலுவாக உள்ள 10 எம்பி தொகுதிகளில் வெற்றி தோல்வியை இருவரும் நிர்ணயிப்பார்கள் என ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ்ஸும் தினகரனும் போராடுவர். இவர்களுடன் சசிகலாவும் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications