பரந்தூர் விமான நிலையத்தால் ஓசூர், ராமேஸ்வரம் விமான நிலையங்களுக்கு சிக்கல்?
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளித்தும் இந்த திட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டால், ஒசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பது கேள்விக்குறியாகும் என பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர், சரக்கு போக்குவரத்து என ஏராளமானோர் அங்கு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. அது போல் பயணிகளை விமான நிலையத்தில் விடுவதற்கும் பிக் கப் செய்வதற்கும் நிறைய கால்டாக்சிகளும், கார்களும் வருவதால் போக்குவரத்தும் நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பது என உறுதியானது. இந்த பரந்தூரில் கிராம மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையத்தை அமைப்பதால் அந்த பகுதி மக்கள் மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதாவது 5320 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. இதற்கான திட்ட செலவு 29,150 கோடி ரூபாயாகும். தனியார் வசம் உள்ள 3774 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது.
அந்த வகையில் இதுவரை 1750 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. நிலம் எடுக்க போராடிய மக்களை தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் "வளர்ச்சி என்பது முக்கியம்தான், ஆனால் வாழ்வாதாரம் என்பது அதைவிட முக்கியம்" என கூறி பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுமாறும் அப்போதைய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அது போல் சட்டசபை தேர்தலிலும் அவர் தேர்தல் வாக்குறுதியாக பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தவெக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நிலையில் டிட்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல்பாடு குறித்து கடந்த மாதம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தும் கைவிடப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். இதுகுறித்து சில அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நிர்மல் குமார் கூறுவதை பார்த்தால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றே தெரிகிறது.
இதனால் ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிப்பது என்பது கேள்விக்குறியாகும். இந்த திட்டங்களுக்காக உழைத்த அதிகாரிகளின் உழைப்பும் வீணாகும் நிலை உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications