பிரம்மாண்டமாக கட்ட திட்டம்.. சென்னைக்கு வரும் புத்தம் புது விமான நிலையம்.. எங்கு தெரியுமா?
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை: சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுங்வார்ச்சத்திரம் அருகே உள்ள பரந்தூரில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.

ஏன் மாற்றம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தேடி வந்தனர்
இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.

இடம் ஓகே
இந்த இரண்டாவது விமான நிலையம் புதிய தொழில்நுட்பத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது. இங்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை தயார் செய்து கொடுக்க உலக அளவிலான டெண்டரை அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டு இந்த விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) உடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனம் இதை உருவாக்கும் என்கிறார்கள்.

என்ன பிளான்
இது சர்வதேச விமான நிலையமாக அமையும். இதற்கான வித்தியாசமான பிளான்களை அரசு வரவேற்று இருக்கிறது. பரந்தூரில் அதிக அளவில் வீடுகள் இல்லை. பரந்தூர் பகுதியில் ராணுவ படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பயணிகள் விமான நிலையத்திற்கு பெரிய அளவில் பிரச்சனையாக அமையாது என்று கூறுகிறார்கள். விரைவில் இங்கு கட்டுமான பணிகள் தொடங்கலாம். 2024க்குள் இங்கு விமான நிலையம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications