விஜய்க்கு தான் ஆதரவு.. அடித்துச் சொன்ன சண்முகம்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! உடைந்த இலைக் கட்சி!
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, அதிமுகவின் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்போம் என சொல்லியிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீண்டும் உறுதிபட தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்த நிலைப்பாட்டை அறிவித்திருந்த அவர், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோதும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது வெளிப்படையான பிளவாக மாறியுள்ளது. ஒரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மற்றொரு தரப்பில் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையிலும் எம்எல்ஏக்கள் பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்.ல்ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், எஸ்.பி. வேலுமணியை குழுத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என 30 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அரசு
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை சி.வி. சண்முகம் தரப்பு எடுத்திருப்பது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை இழக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பேசியதும் இந்த பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது என்றும், அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் தவெகவுக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை மீறி செயல்பட்டால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
சிவி சண்முகம்
ஆனால் அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், தவெகவுக்கு ஆதரவாகவே வாக்களிப்போம் என சி.வி. சண்முகம் தரப்பு உறுதியுடன் நிற்கிறது. இதனால், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்
ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. தற்போது அதிமுகவின் ஒரு பெரிய அணியும் ஆதரவு தர தயாராக இருப்பதால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுக பிளவு
ஆனால் இதே நேரத்தில், இந்த ஆதரவு அதிமுகவில் மேலும் பெரிய பிளவை உருவாக்குமா, அல்லது புதிய அரசியல் கூட்டணிக்கான தொடக்கமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு சாதாரண சட்டப்பேரவை நிகழ்வாக இல்லாமல், தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications