குதிரை பேரம், ராதன் பண்டிட் நியமனம்.. விஜய்க்கு எதிராக சட்டமன்றத்தில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், முகத்தை மூடிக்கொண்டு யார் முதலமைச்சர் விஜய் இல்லத்திற்கு சென்றார்கள்? என்றும், ஜோதிடர் ராதன் பண்டிட் முதல்வரின் சிறப்பு பணி அலுவரலாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "முதலமைச்சராக விஜய் செய்த நல்ல விஷயங்களையும் நாம் பாராட்டி இருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல், அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும், மரபையும் நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க வரவேற்கத்தக்கது. அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. முதலில் 717 மது கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.
இவை அனைத்தையும்தேமுதிக வரவேற்கிறது. இருப்பினும் முதல்வர் அவர்களே நீங்கள் அன்றைக்கு பதவி ஏற்கும்போது உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னீர்கள்.
ஆனால், வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையிலே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில், குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதை நான் மன வேதனையோடு இங்கு பதிய வைக்கிறேன்.
முதலமைச்சர் அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சி தான் செய்வோம் என்று கூறியிருந்தார். அப்படி இருக்கையில் முதல்வர் அவர்களை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள்? என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதை விட ஒரு தலைகுனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் எதுவுமே கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
அதேபோல அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும் பொழுது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு உங்களுடைய ராஜகுருவாக இருக்கும் ராதன் பண்டிட் என்பவரை, அரசு சிறப்பு அதிகாரியாக, அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா.. பர்சனலா அவரை வச்சுக்கணும். அரசு உயர் பதவியிலே கொண்டுவந்து, உங்ளை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications