நீட்.. ஆளுநர் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார்! அரசாங்கத்தை நம்புறோம்.. பெற்றோர் நம்பிக்கை
சென்னை: நீட் தேர்வு விலக்கு எப்போது என்று பெற்றோர் எழுப்பிய கேள்விக்கு, "முடியவே முடியாது" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அரசாங்கத்தை நம்புவதாக பெற்றோர் ஆளுநர் மாளிகையில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்று அதன் பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர முயன்றால் அதுக்கும் தனியாக ஒரு நுழைவுத் தேர்வு (நீட்) என்று வைப்பது மேற்குறிப்பிட்ட மூன்று பொதுத் தேர்வுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது என அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

இது தவிர கோச்சிங் சென்டர், படிக்கும் நேரம் என இந்த நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவர் கையெழுத்திடவில்லை. இந்த சூழலில் இன்று ஆளுநர் மாளிகையில் 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். இதில் பங்கேற்றிருந்த சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி ஆளுநரிடம் நீட் விலக்கு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆளுநர் ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். அதாவது நீட் விலக்கு மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, "நெவர், எவர், கிவென்" என்று ஆளுநர் பதிலளித்துள்ளார். அதாவது எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து வெளியே வந்து பேட்டியளித்த பெற்றோர் அம்மாசியப்பன், "என்னுடைய மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை முடிந்திருக்கிறது. கடந்த 5-6 ஆண்டுகளாக நீட் வேண்டாம் என்று கூறி வருகிறோம். இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி தெரியாமல் நமது மாணவர்கள் பாஸ் பண்ண திணறிக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கும் பள்ளிகளில், படிக்கும் சப்ஜெக்ட்டை வைத்து மட்டும் மாணவர்களை பாஸ் செய்ய வைப்பதில்லை. மாறாக இந்த பள்ளிகள் தனியார் கோச்சிங் சென்டரை கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களை தயாரிக்கின்றனர். இப்படியாகதான் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எந்த சப்ஜெக்ட் எப்படி வரும் என்றே தெரியவில்லை. 15 குழந்தைகள் இறந்திருக்கின்றனர். ஆனால் தங்களது முயற்சியை கைவிடாமல் மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.
இந்த வருஷமும் டாப் மார்க் நம்முடைய மாணவர்கள்தான் பெற்றிருக்கின்றனர். ஆயினும் இந்த வெற்றியை அடைய மாணவர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு தான் 15 மணி நேரம் படித்ததாக மாணவர் ஒருவர் கூறுகிறார். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் குழந்தை. அவன் இளைஞர் அல்ல. இந்த குழந்தைகள் 15 மணி நேரம் படித்துதான் நீட்டை பாஸ் செய்ய வேண்டுமா? கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அவ்வளவு உட்கட்டமைப்போடு சிறப்பாக இயங்கி வருகிறது.

தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது. இப்படியான கல்லூரிகளை உருவாக்கியவர்கள் எந்த நீட் தேர்வை எழுதிவிட்டு வந்தார்கள்? என் பொண்ணு ஜெயிச்சிருச்சி. ஆனா ஒவ்வொரு பெற்றோரும் இதற்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்று கேளுங்கள்? யாருக்காக அந்த செலவை செய்தார்கள்? என கேள்வியெழுப்புங்கள். நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என நான் ஆளுநரிடம் கேட்டேன். அவர் முடியவே முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் அரசாங்கம் இருக்கிறது.. நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்." என்று கூறியுள்ளார். ஆளுநர் கூட்டத்தில் பெற்றோர் ஒருவர் இப்படி வெளிப்படையாக கேள்வியெழுப்பியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications