ஏலே நெல்லையில் 5 ரூவாதான.. ஏமாத்தவா பாக்க.. சென்னையில் பரோட்டா கடை சூறை
சென்னை: பரோட்டா விலை தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திரர்களை பட்டியல் சாதியில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 'தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்' சார்பில், கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில், நேற்று சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உட்பட நெல்லை பகுதியில் இருந்து பஸ்களில் பலரும் வந்திருந்தனர். இரவு அனைவரும் ஊருக்கு தாங்கள் வந்த பஸ்களில் கிளம்பினர்.
அப்போது குரோம்பேட்டை காவல் நிலையம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்து ஒரு பஸ் நிறுத்தப்பட்டது.
16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்துள்ளார். ஹோட்டல் ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.
அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று சிறுவன் வாக்குவாதம், செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று உடன் வந்தவர்களிடம் தகவல் கூறியுள்ளார். கோபமடைந்த மேலும் பல வாலிபர்கள் சேர்ந்து கொண்டு ஹோட்டலுக்கு சென்று தகராறு செய்தனர்.
இரு தரப்புக்கும் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஹோட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்றனர்.
இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகும். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். கட்சிக்காரர் ஒருவர் ஹோட்டல் ஊழியர் மீது வென்னீரை ஊற்றியதால் அந்த ஊழியர் படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.