ஆட்டம் ஆரம்பம்!டிசம்பர் மாதத்திற்குள் அதிமுகவில் உட்கட்சி தேர்தல்..ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதி அளித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும், அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாகவே உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படுவதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக உட்கட்சி தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும் கட்சியின் சட்ட திட்டங்களின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சர்வாதிகாரப் போக்கு
ஆனால் தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுக சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை நியமிக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து வருகிறது.

தடை விதிக்க வேண்டும்
இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தான் பலமுறை புகார் அளித்தும் அந்த புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கேள்வி
அப்போது மனுதாரர் தரப்பில், அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறாமல் நிர்வாகிகள் நியமிப்பது சட்டவிரோதம் எனவும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி இந்த வழக்கில் ஏன் அதிமுகவை எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

டிசம்பர் மாதம்
இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications