சென்னை பீச் - வேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை வழித்தடத்தில் தாமதமாகிறது பாசஞ்சர் ரயில் சேவை!
சென்னை: திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தினசரி சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், இந்த ரயில் சேவை தற்போது தள்ளிபோயுள்ளது.
வட மாவட்டங்களில் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை என்பது மிக குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. சித்ரா பௌர்ணமி, கிரிவலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை நிரந்தரமாக திருவண்ணாமலை வரை இயக்கப்பட வேண்டும் என்பது திருவண்ணாமலை, வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இந்நிலையில் மே மாதம் 2ம் தேதி முதல், அதாவது இன்று முதல் இந்த ரயில் சேவை இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அறிவிப்பில், "தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை சென்று அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது.
அதேபோல, "மே மாதம் 3ம் தேதியிலிருந்து அதாவது நாளை முதல் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்" என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் தள்ளி போவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேதி குறிப்பிடாமல் இந்த வழித்தடத்தில் இயக்க இருந்த ரயில் சேவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல விழுப்புரம், சேலம், விருதாச்சலம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் சில பாசஞ்சர் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் திட்டமிட்டபடி இன்று முதல் இயங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications