பயணிகளுக்கு குட்நியூஸ்.. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை ஏறும் இடத்தை மாற்ற அனுமதி
சென்னை: இனி ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் வரை பயணிகள் தாங்கள் ஏறும் ரயில்வே ஸ்டேஷனை மாற்றி கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதெடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை பயணிகள் தாங்கள் ஏறும் இடத்தை (Boarding) மாற்றிக்கொள்ளலாம்.

இந்த புதிய வசதி 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளுக்கு பெரிய அளவில் பயணளிக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு ஒருவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஏறும் இடத்தை மாற்ற விரும்பினால் ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பு மாற்றம் கோரிக்கை வைக்க வேண்டும்.
இந்த கோரிக்கை ரயில்வேயால் ஏற்கப்பட்டு ரயில் புறப்படுவதற்கு முன் தயாரிக்கப்படும் முதல் முன்பதிவு (First Chart) அட்டவணை லிஸ்ட்டில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு மாற்றம் செய்யலாம். இந்த மாற்றங்கள் இரண்டாவது முன்பதிவு அட்டவணை (Second Chart) லிஸ்ட்டில் காண்பிக்கப்படும்.
இந்த வசதியை பயணிகள் IRCTC இணையதளம் சேவை வழியாகவோ அல்லது பிஆர்எஸ் (PRS) கவுண்டர் உள்ளிட்டவற்றின் வாயிலாகவோ பெறலாம். இந்த சமயத்தில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் மற்றும் உரிய புகைப்பட அடையாள ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் இந்த செயல்முறை உறுதியான (Confirmed) மற்றும் ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். காத்திருப்பு பட்டியல் (Waiting list) டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது. அதேபோல் ஏறும் இடத்தை ஒருமுறை மட்டுமே மாற்றலாம். இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாராவதற்கு முன்பே கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications