வலில துடிச்சத பார்க்க முடியல சார்..அதான் குத்திட்டேன்! அம்மாவ மட்டும் காப்பாத்துங்க! கதறிய விக்னேஷ்
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மருத்துவர் பாலாஜியை தாக்கியதற்கான காரணம் குறித்து தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூரைச் சென்ற விக்னேஷ் என்ற இளைஞர் இன்று காலை சுமார் பத்து மணி அளவில் கிண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். நேராக புற்றுநோய் சிறப்பு பிரிவு மருத்துவர் பாலாஜியின் அறைக்குச் சென்ற அவர் கதவை சாத்தியதோடு பாலாஜியின் வாயில் கையால் குத்தி இருக்கிறார்.

தொடர்ந்து ஆத்திரம் அடங்காத அவர் தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து பாலாஜியின் கழுத்து முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனால் அறை முழுவதும் ரத்தம் சிதறி கிடக்க அலறியபடி வெளியே ஓடி வந்திருக்கிறார் பாலாஜி.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். இதை அடுத்து பாலாஜியை மீட்ட அங்கிருந்தவர்கள் விக்னேஷை பிடித்து வைத்ததோடு பாலாஜியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் கைது செய்து கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்திருக்கிறார். இதற்கிடையே விக்னேஷ் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அதில் தனது தாய் பிரேமா நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் சபிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார். தொடர்ந்து கிண்டி மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் பாலாஜி தான் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனாலும், அவருக்கு குணமாகவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து வீட்டில் பிரேமாவுக்கு அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு இதற்கு முன்னர் எடுத்த மருந்துகள் காரணமாக பக்க விளைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார். இதை அடுத்து கிண்டி மருத்துவமனைக்குச் சென்ற விக்னேஷ் மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் தன்னை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இன்று காலை பிரேமாவுக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டில் இருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவமனைக்குச் சென்று பாலாஜியை சந்தித்தும், எங்க அம்மாவுக்கு என்ன மருந்து கொடுத்தாய் என கேட்டு வாயில் தாக்கினேன். பிறகு கோபம் தாங்காமல் வீட்டில் இருந்து எடுத்து வீட்டில் இருந்து எடுத்து வைத்திருந்த கத்தியால் குத்தினேன். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்கள்.. ஆனால் என் அம்மாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்" என போலீசாரிடம் விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications