பட்டா மாறுதல்.. ஆன்லைனில் சர்வே எண் வருதா? உட்பிரிவு எண்? இதென்ன புதுஸா? பதிவுத்துறை தந்த நம்பிக்கை
சென்னை: சொத்து வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் பெற வேண்டுமானால், அதற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது, நேரம் மிச்சமாகிறது, இடைத்தரகர்களுக்கு இதில் இடமில்லை, பணம் விரயமாகாது, அலைச்சல் குறைகிறது. எனினும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சில இடங்களில் மட்டும், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முக்கிய வேண்டுகோள் வருவாய்த்துறைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக, சொத்து வாங்கியவர்கள், இசேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதேபோல, இசேவை வெப்சைட்டிலும், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்
இப்படி வரும் ஆன்லைன் விண்ணப்பங்களை, சர்வேயர்களுக்கும், விஏஓவுக்களுக்கும் செல்லும்.. அவர்கள் அதுதொடர்பான கள ஆய்வு நடத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
பொதுவாக, பட்டா மாற்றுவதில், உட்பிரிவற்ற பட்டா, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என 2 வகைகள் உள்ளன.. அதாவது, ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தால் அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் ஆகும்.
உட்பிரிவு இல்லாத பட்டாக்களுக்கு உடனடியாக பத்திரப் பதிவுத்துறையில் இருந்து வருவாய்துறைக்கு குறிப்பு அனுப்பி நில அளவீடு, ஆவண ஆய்வு செய்து பத்திரப்பதிவு நடப்பது வழக்கமாகும்.
பட்டா மாறுதல் வெப்சைட்
இந்நிலையில், பட்டா மாறுதலுக்கு அதற்கான வெப்சைட்டில் விண்ணப்பிக்கும்போது, பழைய உட்பிரிவு எண்கள் வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதாவது. சர்வே எண், பழைய உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட சொத்தின், ஒரு பகுதியை வாங்குவதாக இருந்தால், அதற்கு புதிய உட்பிரிவு எண் பெறுதல் தலைப்பில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படி விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தாலுகா, கிராமம் விபரங்களை உள்ளீடு செய்தால், பிரதான சர்வே எண்கள் திரையில் தோன்றும்.. அதை தேர்வு செய்தால், சர்வே எண்ணில், இப்போதுள்ள உள்ள உட்பிரிவு எண்கள் திரையில் தோன்றும். இதில், பொருத்தமான உட்பிரிவை தேர்வு செய்தால்தான், விண்ணப்ப பதிவின் அடுத்த ஆப்ஷனுக்கு செல்ல முடியும்.
உட்பிரிவு எண்கள்
ஆனால், பிரதான சர்வே எண்ணை தேர்வு செய்த பிறகு, உட்பிரிவு எண்கள் வருவதில்லையாம்.. பாதியிலேயே முடங்கிவிடுகிறது. மறுபடியும் முயற்சித்தாலும், உட்பிரிவு எண்கள் வருவதில்லை. அதனால் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைமை உள்ளதால், இந்த இடர்பாடினை வருவாய் துறை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே இப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து, விரைவில், சிக்கல் சரிசெய்யப்படும் என்றும் வருவாய் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications