பின்னிட்டாரு..சொல்லி அடித்த பவன் கல்யாண்! பழனி - திருப்பதி இடையே பேருந்து சேவை.. வெளியான அறிவிப்பு
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழனி வந்திருந்த நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், பழநியில் இருந்து திருப்பதிக்கு பஸ் சேவை மீண்டும் துவங்கப்படும் என பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் சொன்னது போலவே பழனியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பி ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் பிப்ரவரி 14ஆம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு சென்றார்.
ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற துணை முதலமைச்சர் பவன் கல்யாணிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பவன்கல்யாண் அவரது மகன் அகிரா நந்தன் ஆகியோர் உச்சிகால பூஜையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பழனியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு தினமும் பேருந்து இயக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதும் தற்போதுதான் தனக்கு தெரியவந்தது என்றும், எனவே ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பழனி திருப்பதி பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கிறேன். பழனியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சொன்னதை செய்திருக்கிறார் பவன் கல்யாண். அதாவது திருப்பதி பழனி இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்க இருப்பதாக ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. அதன்படி திருப்பதியில் இருந்து பழனிக்கு, குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பவானி வழியே பேருந்து சேவை தொடங்க இருக்கிறது.
திருப்பதியில் 5:00 மணிக்கு கிளம்பும் பேருந்து கிருஷ்ணகிரிக்கு 11.15 மணிக்கும், தர்மபுரிக்கு 12.30 மணிக்கும், பழனிக்கு அதிகாலை 5.15 மணிக்கு வருகிறது. மற்றொரு பேருந்து காலை 7:15 மணிக்கு கிளம்பி கிருஷ்ணகிரிக்கு 2:30 மணிக்கும், தர்மபுரிக்கு 12 மணிக்கும், பழனிக்கு 5.30 மணிக்கு வருகிறது. இந்த சேவை இன்று முதல் தொடங்குகிறது. வரும் 29 ஜூன் மாதம் வரை 120 நாட்களுக்கு இந்த சேவை இயங்கும் எனவும் வரவேற்பை பொறுத்து இந்த பேருந்து சேவை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். விசேஷ தினங்கள் மட்டுமன்றி சாதாரண நாட்களில் கூட அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகப்படியாக இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை பழனி திருப்பதி இடையே ஆந்திர அரசு போக்குவரத்து சேவையை வழங்கி வந்தது.
கொரோனா காரணமாக இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கு பிறகு அந்த சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் பழனி வந்த ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி பழனி இடையே மீண்டும் பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். வெறும் பேட்டியோடு இல்லாமல் தற்போது அதனை செய்தும் காட்டி இருக்கிறார்.இதை அடுத்து பழனி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications