பாஜகவின் பெரிய ஆபரேஷன்.. பனையூருக்கே பறக்கும் பவன் கல்யாண்.. விஜயுடன் மீட்டிங்.. அப்போ கன்பார்ம்?
சென்னை: தெலுங்கு நடிகர் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், தமிழக நடிகர் விஜய்யை சந்திக்க விரைவில் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தவெக விஜய்யை இணைக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களுக்கும் நெருக்கமான வட்டாரங்கள், பவன் கல்யாண் விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி, பாஜக கூட்டணியில் இணைவதன் நன்மைகளை விளக்கவுள்ளதாக தெரிவிக்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் விஜய்யின் செல்வாக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.

விஜயை சந்திக்கும் பவன் கல்யாண்
ஆந்திராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் பவன் கல்யாண் அங்கே துணை முதல்வராக இருக்கிறார். அங்கே தேர்தல்களில் தொடர்ந்து தோற்றவர் கடந்த முறை கூட்டணி வைத்து வென்றார். இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் தேசிய கட்சித் தலைவர்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்.
இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் TVK எவ்வாறு இணையும் என்பது போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் போன்ற பிரபல முகங்களை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜக தனது நிலையை எவ்வாறு பலப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதையும் பவன் கல்யாண் அவரிடம் பேச உள்ளார்.
பாஜக கூட்டணி விஜய்
பாஜக கூட்டணிக்கு வாங்க.. எல்லாம் சரியாகிடும். ஈசியாக ஆட்சியை பிடிக்கலாம். ஏற்கனவே பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வாக்கு உள்ளது. நீங்களும் வந்தால் ஆட்சியை பிடிப்பது ரொம்ப எளிது. என்று விஜயிடம் பவன் கல்யாண் பேச உள்ளாராம்.
ஏற்கனவே பாஜகவில் இருக்கும் ஆந்திர பின்புலம் கொண்ட தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் பவன் கல்யாணை விஜயிடம் போனில் பேச வைத்து உள்ளாராம். அதில் என்ன பேசினார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதில், முதல்வர் பதவியை நேரடியாக இலக்காகக் கொள்ளாமல், கூட்டணி அமைத்து துணை முதல்வராகப் பொறுப்பேற்பது ஒரு சிறந்த அரசியல் நகர்வாக அமையும் என்று பவன் கல்யாண் விஜய்யிடம் கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவருக்கு அரசியல் அனுபவத்தையும், அரசியல் ரீதியாக பலத்தையும் தரும் என்று பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
தனது குடும்ப அனுபவத்தை உதாரணம் காட்டி பவன் கல்யாண் விஜய்யிடம் எடுத்துரைத்துள்ளார். அவரது சகோதரரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி, முன்பு ஆந்திராவில் முதல்வர் பதவியை தனியாகப் போட்டியிட்டு அடைய முயன்றார். இதற்காக பிரஜா ராஜ்ஜியம் கட்சியை தொடங்கி விஜய் பாணியிலேயே நடத்தினார். ஆனால், அது வெற்றி பெறவில்லை. பின்னர், பவன் கல்யாண் தனியாக ஜனசேனா தொடங்கினார். பாஜக தலைமையிலான NDA கூட்டணியுடன் இணைந்து துணை முதல்வர் பதவிக்கு வழி தேடினார். அதில் வெற்றியும் பெற்றார். இது அவருக்கு ஆந்திர அரசியலில் முக்கியத்துவத்தையும், நிலைத்தன்மையையும் கொடுத்தது.
விரைவில் சந்திப்பு
விஜய்யுடனான உரையாடலில், படிப்படியான அரசியல் வளர்ச்சி முக்கியம் என்பதை பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். "அரசியல் என்பது சினிமா அல்ல. முதல் நாளிலேயே கதாநாயகனாக முடியாது" என்று அவர் விஜய்யிடம் கூறியதாகத் தெரிகிறது. NDA போன்ற ஒரு வலுவான கூட்டணியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்பது, விஜய்க்கு நிர்வாக அனுபவத்தையும், அரசியல் நம்பகத்தன்மையையும், தமிழகம் முழுவதும் தனது செல்வாக்கை விரிவாக்க ஒரு வாய்ப்பையும் வழங்கும் என்று பவன் கல்யாண் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பவன் கல்யாண் விஜய்யை சந்திக்க விரைவில் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தவெக விஜய்யை இணைக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications